இந்துத்வாவை அவமதிக்கும் வகையில் நடக்கிறார் சோனியா-விஎச்பி
டெல்லி & கோவை: இந்துத்வாவையும், இந்தியக் கலாச்சாரத்தையும் அவமதித்து வருகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி என்று சாடியுள்ளார் விஸ்வ இந்து பரிஷத்தலைவர் அசோக் சிங்கால்.
இதுகுறித்து அவர்கூறுகையில், இந்தியக் கலாச்சாரத்திற்கும், இந்துத்வாவுக்கும் எதிராக நடந்துவரும் சதித் திட்டத்தில் சோனியா காந்தியும் ஒரு பங்கு வகிக்கிறார். அவர் உடனடியாக தனது சொந்த நாடான இத்தாலிக்குத் திரும்ப வேண்டும் என்றார் அவர்.
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதே போல ராகுல் காந்தியும் கூறியிருந்தார். இந்த நிலையில் அசோக் சிங்கால் தற்போது சோனியாவை சாடியுள்ளார்.
ராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டு வராவிட்டால்...:
அயோத்தியில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். அந்த இடத்தில் கோவில் கட்ட நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி கோவை கிக்காணி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று அனுமன் மகா வேள்வி நடந்தது.
விசுவ இந்து பரிஷத் தின் அகில உலக பொதுச் செயலாளர் பிரவின் தொகாடியா அதில் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும். இல்லையேல் சட்டம் கொண்டு வர நிர்ப்பந்தித்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications