தமிழில் தேசிய கீதம் பாடம் தடை ஏதுமில்லை-இலங்கை அரசு பல்டி!
கொழும்பு: இலங்கை தேசிய கீதத்தை இனி சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும், தமிழில் பாடக் கூடாது என்று கூறியதை, அடுத்த சில மணி நேரங்களில் மறுத்துள்ளது இலங்கையின் ராஜபக்சே அரசாங்கம்.
இலங்கையில், தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து, அதிபர் ராஜபக்சே தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.
லண்டனில் தமிழர்களால் துரத்தப்பட்டு இலங்கைக்கு தப்பி ஓடி வந்த நிலையில், அந்த ஆத்திரத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தமிழ் இணையதளங்கள் கருத்து தெரிவித்திருந்தன.
இது தமிழர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் கருணாநிதி இது தொடர்பாக இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், "இலங்கையில் சிங்களர்களும், தமிழர்களும் வசித்து வருகின்றனர். அதனால் அந்நாட்டு தேசிய கீதம் இந்நாள் வரை சிஙகளத்திலும், தமிழுலும் பாடப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ராஜபக்சே அரசு அந்த வழக்கத்திற்கு தடை விதித்து இனி இலங்கை தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கான தீர்மானமும் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் ஏடுகள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் உண்மை என்றால் ராஜபக்சே அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே புண்பட்டிருக்கும் தமிழர்களை இந்த செய்தி மேலும் புண்படுத்தும். இலங்கையின் அரசின் இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்," என்று கூறியிருந்தார்.
இலங்கை மறுப்பு:
இப்போது இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை விவகார மந்திரி ஜான் சேனவிரத்னே விளக்கம் ஒன்றை அளித்து உள்ளார்.
அதில், இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வருவதில் மாற்றம் செய்வது குறித்து அமைச்சரவை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்ட உரிமையை பறிக்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம், என்றும் அவர் கூறியுள்ளார்.