மருத்துவமனையில் 7வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் நாயுடு-உடல்நிலை மோசமாகிறது
மழை, வெள்ள சேதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய நிவாரணத்தை ஆந்திர மாநில அரசு வழங்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். அவரது உடல் நலம் மோசமடைந்ததைத் தொடர்ந்து போலீஸார் அவரைக் கட்டாயப்படுத்தி கைது செய்து, நிஜாம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கையும் போட்டுள்ளது ஆந்திர அரசு.
மருத்துவமனையிலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார் நாயுடு. திரவ உணவைக் கூட அவர் எடுத்துக் கொள்ள மறுத்து வருகிறாராம். இதனால் உடல் நலம் மோசமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நாயுடு பிடிவாதமாக எந்த வகையான உணவையும் எடுத்துக் கொள்ள மறுத்து வருவதால் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. அவரை எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். நாயுடுவுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நேற்று என்டிஆர் பவனில் தெலுங்கு தேசம், சிபிஐ, சிபிஎம், லோக் சத்தா, சிபிஐ புதிய ஜனநாயகம், ஆர்எஸ்பி ஆகிய கட்சிகளின் அவசரக் கூட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் குறித்து அலட்சியப் போக்கைக் கையாண்டு வரும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து மாநிலத்தின் அனைத்து சாலைகளையும் முற்றுகையிட்டு சாலைப் போக்குவரத்தை முடக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
நேற்று இரவு பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, நாயுடுவை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
தொண்டர்கள் போராட்டம்-ஹைதராபாத்தில் பதட்டம்:
நாயுடு உடல் நிலை மோசமடைந்து வருவதால் தெலுங்கு தேசம் தொண்டர்கள் ஹைதராபாத்தில் போராட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் தலைநகரில் பதட்டம் நிலவகிறது.
இதற்கிடையே நாயுடுவை டாக்டர் சீனிவாசன் தலைமையிலான மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் நடத்திய சோதனையில் சந்திரபாபு நாயுடுவின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்தது. ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது.
இதுபற்றி டாக்டர் சீனிவாசன் கூறும்போது, சந்திரபாபு நாயுடு சிகிச்சை பெற மறுத்து வருகிறார். நாங்கள் அவரது உடலை பரிசோதித்தபோது பித்தப்பையில் கற்கள் உருவாகி இருப்பதை கண்டு பிடித்துள்ளோம். அவரது உடலில் பொட்டாசியத்தின் அளவு உயர்ந்துள்ளது. சோடியம் குறைந்து விட்டது. இதனால் அவர் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது.அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.
இதுபற்றி அவரிடம் எடுத்து கூறினோம். அதற்கு அவர், விவசாயிகளுக்கு கூடுதல் வெள்ள நிவாரணம் அறிவிக்கும் வரை நான் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்று கூறி விட்டார் என்றார்.
சந்திரபாபு நாயுடு அருகில் அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். அவர்களும் சந்திரபாபு நாயுடுவிடம் உண்ணாவிரதத்தை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதை அவர் ஏற்க மறுத்து விட்டார்.