ஆஸி-நீரில் மூழ்கிய மனைவியரைக் காப்பாற்ற முயன்ற 2 இந்தியர்கள் பலி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் பென்குவின் தீவில் நீர்ச் சுழலில் சிக்கிக் கொண்ட தங்களது மனைவிகளைக் காப்பற்ற முயன்ற இரண்டு இந்தியர்கள் பரிதாபமாக அதில் சிக்கி உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ளது பெங்குவின் தீவு. இது சற்று ஆபத்தான நீர்ச் சுழல்களை கொண்ட கடற்கரைப் பகுதியாகும். இங்கு அடிக்கடி பலர் மாட்டிக் கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பவன் கன்சலா மற்றும் பிரவீன் ஸ்ரீகாந்த் ஆகிய இருவர் தங்களது மனைவிகளுடன் அப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். பெங்குவின் தீவிலிருந்து மெயின் பகுதிக்கு வர அவர்கள் அங்கிருந்த நீர்ச்சுழல்களைக் கொண்ட மணற்பாங்கான பகுதி வழியாக சென்றபோது இருவரது மனைவியரும் நீரில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து இருவரையும் காப்பாற்ற ஸ்ரீகாந்த்தும், கன்சலாவும் முயன்றனர். அதில் இருவரது மனைவியரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். ஆனால் ஸ்ரீகாந்த்தும், கன்சலாவும் சுழலில் சிக்கி மூழ்கி விட்டனர். இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களை மீட்க மீட்புப் படையின் உதவி கோரப்பட்டும் அவர்கள் தாமதமாக வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கன்சலா பாய்லர் தயாரிப்பு நிறுவனத்தை இந்தியாவில் நடத்தி வந்தார். சமீபத்தில்தான் தனது குடும்பத்தினருடன் அவர் ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். அவருக்கு 7 மற்றும் 9 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.