சுரண்டையில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு: வியாபாரிகள் கலக்கம்
சுரண்டை: சுரண்டையில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசியை அடுத்த சுரண்டையில் வியாபாரிகள் அதிகம் உள்ளனர். சுரண்டை பகுதியில் காய்கறி மார்கெட், பாத்திர வியாபாரம், ஜவுளி கடைகள் மற்றும் பல்வேறு வியாபார நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
இங்கு தென்காசிக்கு அடித்தபடியான வியாபாரம் நடக்கும். கடந்த வாரம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தையொட்டி வியாபார நிறுவனங்களில் பல லட்சம் முதல் கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி பாத்திரக் கடைகள் மற்றும் ஜவுளி கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
மேலும் காய்கறி மார்க்கெட்டுகளிலும் பொருட்களின் வரத்து அதிகரித்து வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் மார்கெட், பஜார் பகுதி மற்றும் டாஸ்மாக் கடைகளில் 500, 100 ரூபாய் கள்ள நோட்டுகளை அதிகளவு புழக்கத்தில் விட்டுள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிலர் கள்ள நோட்டு என தெரிந்ததும் அதை கிழித்தோ, எரித்தோ விடுகின்றனர். இதனை சாதகமாக்கிய அந்த கும்பல் கள்ள நோட்டுகளை சர்வ சாதாரணமாக புழக்கத்தில் விட்டுள்ளன. எது கள்ள நோட்டு, எது நல்ல நோட்டு என்று கண்டுபிடிக்க முடியாத அளவில் உள்ளதால் வியாபாரிகளும் அதனை வாங்கி விடுகின்றனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் தங்கி கேரளாவைச் சேர்ந்த சிலர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் வி்ட்டு வந்தனர். அவர்கள் தான் தற்போது சுரண்டையை குறிவைத்துள்ளனரோ என்று வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.