தொகுதி பங்கீடு: திமுக-காங்கிரஸ் நாளை பேச்சுவார்த்தை
இது தொடர்பாக பேச்சு நடத்த அமைக்கப்பட்ட இரு கட்சிகளின் குழுக்களும் நாளை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளன.
திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்னும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது.
அதற்கு முன் காங்கிரசுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட திமுக முடிவு செய்துள்ளது.
திமுகவிடம் 90 இடங்களைக் கேட்கும் காங்கிரஸ் குறைந்தபட்சம் 70 இடங்களை எதிர்பார்க்கிறது. ஆனால், 50 இடங்கள் என்று பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ள திமுக, அதிகபட்சம் 60 இடங்கள் தரும் என்று தெரிகிறது.
இந் நிலையில் நாளை திமுகவுடன் காங்கிரஸ் ஐவர் குழு அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளது. இதில் இடப் பங்கீடு எட்டப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், திமுகவுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்துவோம். திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்றார்.