ரிலையன்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம் ரத்து! - மராட்டிய அரசு அதிரடி
மும்பை: ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கவிருந்த மஹா மும்பை சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மராட்டிய அரசு.
இந்த நிலங்களை விவசாயிகள் இனி தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது.
மும்பையில் 35,000 ஏகர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டம் அமைக்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மராட்டிய அரசு அனுமதியளித்திருந்தது. 45 கிராமங்கள் இந்த பரப்பளவுக்குள் வந்தன.
2009-ம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2009-டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தப் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.
அடுத்து மராட்டிய அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்தது. கிட்டத்தட்ட 15 மாதங்கள் கழித்து இப்போதுதான் இதில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. கொடுக்கப்பட்ட அவகாசத்துக்குள் திட்டம் நிறைவு பெறாததால் இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாகவும், இனி விவசாயிகள் தங்கள் நிலங்களை விருப்பபப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, அரசு நிலங்களில் விவசாயத்துக்கு ஏற்றதாக உள்ளவற்றையும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு ஆரம்பத்திலிருந்தே விவசாயிகள் கடும் எதிர்ப்பு காட்டி வந்தனர். 2008-ம் ஆண்டு விவசாயிகளிடம் இந்த திட்டம் குறித்து ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தியது அரசு. அதிலும் ரிலையன்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம் வேண்டாம் என்றே மக்கள் தீர்ப்பளித்திருந்தனர்.
இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications