சில நாட்களில் ராசாவின் மனைவியிடம் சிபிஐ விசாரணை?
2ஜி ஊழலில் இதுவரை ஆ.ராசா, சித்தார்த், சந்தோலியா, பல்வா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வரும் 31ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஜக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விசராணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் பண பரிமாற்றம் குறித்து சிபிஐயுடன் சேர்ந்து விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் பரமேஸ்வரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் பரமேஸ்வரியிடம் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்.
அப்போது கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவன நிர்வாகிகள் சிலரும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்நிறுவனத்தில் ஆ.ராசா மனைவியும் ஒரு இயக்குனராக இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சரான பின்பு கிரீன் ஹவுஸ் நிறுவனத்தில் நிறைய பணம் முதலீடு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இயக்குனராக பதவி ஏற்ற சுமார் ஓராண்டு கழித்து பரமேஸ்வரி அந்த பதவியில் இருந்து விலகிவிட்டதாக தெரிகிறது.
அந்நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை பரமேஸ்வரி ராசாவின் உறவினர் மலர் விழிக்கு மாற்றி கொடுத்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடந்த பண பரிமாற்றங்கள் பற்றியே பரமேஸ்வரியிடம் விசாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விசாரணையின்போது பரமேஸ்வரியின் வங்கி கணக்குகளையும் சிபிஐ ஆய்வு செய்ய உள்ளது. கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் சாதிக் பாட்சாவிடம் ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது.
அவர் கொடுத்துள்ள தகவல்களை பரமேஸ்வரியிடம் விசாரித்து ஒப்பிட்டுப்பார்க்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். எனவே, இதனால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுமார் 20 பேர் மீது சிபிஐ பிடி இறுகி உள்ளதாக கூறப்படுகிறது.