சீனாவிடம் 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தனது அண்டை நாடான சீனாவிடம் இருந்து 6 நீர் மூழ்கி கப்பல்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சீனாவிடம் இருந்து அதிநவீன தொழில்நுட்ப பைட்டர் ஜெட்கள் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் சீனாவிடம் இருந்து 6 நீர் மூழ்கி கப்பல்கள் வாங்கத் திட்டமிட்டுள்ளது என்று தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் எந்த வகை கப்பல்கள் கேட்டுள்ளது என்பதை அந்த பத்திரிக்கை குறிப்பிடவில்லை. அதில் கடலுக்கு அடியில் அதிக நாட்கள் இருக்கவும், சத்தமின்றி காரியம் சாதிக்கவும் ஏதுவாக இருக்கும் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை இஸ்லாமாபாத் வாங்கவிருக்கிறது என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது.
அதிகரித்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க சீன நீர் மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு அனுமதி அளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் அமைச்சரவையை கேட்டுள்ளது.
பாகிஸ்தானிடம் இந்தியாவை விட அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக அன்மையில் செய்திகள் வெளியாகின. தற்போது கடல் வழியாகவும் தனது பலத்தை அதிகரிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.