ஸ்பெக்ட்ரம்: கனிமொழி-தயாளு அம்மாளிடம் சிபிஐ விசாரணை
அதே போல கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும் விசாரணை நடைபெற்றது.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு கனிமொழி இன்று காலை வந்தார். அங்குள்ள கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் வைத்து அவரிடம் அங்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் தயாளு அம்மாளும் அறிவாலயம் வந்தார். அவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காலை 10 மணிக்கு இந்த விசாரணைகள் தொடங்கின.
கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும், தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறைகேடாகப் பெற்ற ஷாகித் உசேன் பல்வாவுக்குச் சொந்தமான டிபி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து, சினியுக் என்ற இன்னொரு நிறுவனம் மூலம் கலைஞர் டிவி ரூ. 214 கோடியைப் பெற்றது.
இந்தத் தொகை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக லஞ்சமாக ஸ்வான் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்குத் தந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், இதை தாங்கள் கடனாகத்தான் பெற்றதாகவும், பின்னர் வட்டியுடன் அதைத் திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி நிர்வாகம் கூறியுள்ளது. இந் நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் சில வாரங்களுக்கு முன் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. அதன் நிர்வாகியான சரத்குமாரிடமும் விசாரணை நடத்தியது.
இந் நிலையில் அதன் உரிமையாளர்கள் என்ற வகையில் கனிமொழியிடமும் தயாளு அம்மாளிடமும் இன்று சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
இந்த இருவரும் பங்குதாரர்கள் மட்டுமே என்றும், கலைஞர் தொலைக்காட்சியின் நிதி்ப் பரிவர்த்தனைகளில் இருவருமே தலையிட்டது இல்லை என்றும் அந்தத் தொலைக்காட்சி முன்பு விளக்கம் தந்ததும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் வரும் 31ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் விசாரணை தொடர்பாக விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தாக வேண்டு்ம் என்ற நிலையில் கனிமொழி, தயாளு அம்மாளிடம் விசாரணை நடந்துள்ளது.
டெல்லியிருந்து வந்த இரு பெண் அதிகாரிகள் உள்பட 4 சிபிஐ அதிகாரிகள் இவர்களிடம் விசாரணை நடத்தினர். அதே போல சரத்குமாரிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
கனிமொழியிடம் நிரா ராடியாவின் டேப்களில் உள்ள விவரங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.
தொகுதிகளை அடையாளம் காண்பதற்காக திமுக-காங்கிரஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சிபிஐ விசாரணை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்குப் பின் கனிமொழி நிருபர்களிடம் கூறுகையில், சிபிஐ சில விவரங்களைக் கேட்டதாகவும், அதை அவர்களுக்கு விளக்கியதாகவும், வேறு யாரையும் போல விசாரணையிலிருந்து தப்பியோடவில்லை என்றும் கூறினார்.
விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தோம்-கனிமொழி பேட்டி
விசாரணைக்குப் பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், சிபிஐ அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்தோம். கலைஞர் தொலைக்காட்சியின் கணக்கு விபரங்கள் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஏற்கனவே அளித்த தகவல்களை நாங்கள் உறுதிப்படுத்தினோம். கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஏற்கனவே அளித்துள்ள அறிக்கையில், என்ன நடந்தது என்பதை தெளிவாக தெரிவித்துள்ளார். அதை,நாங்கள் உறுதிப்படுத்தினோம்.
அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்தோம். மற்ற அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்ளாமல், அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை அளித்தோம். விசாரணையின் போது எந்தவித நிர்பந்தமும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை.இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது என்றார் கனிமொழி.