மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைக்கு உதவ ஜப்பான் விரையும் இங்கிலாந்து குழு
லண்டன்: ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலில் சிக்கியவர்களை மீட்பதற்கும், தேடும் பணியில் உதவுவதற்கும் இங்கிலாந்து நிபுணர் குழு ஒன்று விரைகிறது.
இதுதொடர்பாக ஒரு நிபுணர் குழுவை அனுப்பி வைக்குமாறு ஜப்பான் கோரியிருந்தது. இதையடுத்து இந்தப் பணியில் மிகுந்த அனுபவம் உடைய குழுவை இங்கிலாந்து அனுப்பி வைக்கிறது.
இந்த குழுவில் 59 தீயணைப்புப் படையினர் ஈடுபட்டிருப்பார்கள். இவர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்கள். மேலும், 2 மீட்புப் பணி நாய்கள், மருத்துவக் குழுவினரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் ஜப்பானில் தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள சர்வதேச குழுவினருடன் இணைந்து செயல்படுவர். மான்செஸ்டரிலிருந்து இவர்கள் நேரடியாக ஜப்பான் செல்கின்றனர்.
ஜப்பானில் ஏற்பட்ட மிகப் பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியைத் தொடர்ந்து அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் வீடுகள், உடமைகளை இழந்துள்ளனர். 100 பேருடன் சென்ற கப்பலைக் காணவில்லை. நான்கு ரயில்களைக் காணவில்லை, மேலும் பல ஆயிரம் பேர் குறித்துத் தகவல் இல்லை. அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.