திருவாரூரில் போட்டியிட கருணாநிதி முடிவு-யாரும் மனு தாக்கல் செய்யவில்லை
மேலும் கருணாநிதி திருவாரூரில் போட்டியிடுவது குறித்து அங்குள்ள திமுகவினருக்கு கட்சி மேலிடத்திலிருந்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் திருவாரூர் மாவட்ட திமுகவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
தனது அரசியல் வாழ்க்கையில் ஒருமுறை கூட சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டதில்லை முதல்வர் கருணாநிதி. தஞ்சாவூரில் அவர் போட்டியிட்டுள்ளார். ஆனால் திருவாரூரில் அவர் நின்றதில்லை. மாறாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போட்டியிட்ட ஒரே அரசியல் தலைவர் என்ற பெருமையும் கருணாநிதிக்கு மட்டுமே உண்டு.
இந்தநிலையில், வருகிற சட்டசபைத் தேர்தலில் கருணாநிதி திருவாரூரில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து திருவாரூர் திமுகவினருக்குத் தெரிவிக்கப்பட்டு பணிகளைத் தொடங்குமாறு பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டு விட்டதாம். இதனால் தொண்டர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதியை அவர் பிறந்த மண்ணில் ஜெயிக்க வைக்க திமுகவினர் உறுதி பூண்டு பணிகளையும் தொங்கி விட்டனர்.
கருணாநிதி இதுவரை போட்டியிட்டு வென்ற தொகுதிகள் விவரம்:
முதல்வர் கருணாநிதி முதல்முறையாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி குளித்தலையாகும். 1957ம் ஆண்டு இங்கு அவர் வெற்றி பெற்றார். பின்னர் 1962ம் ஆண்டு தஞ்சாவூரில் வென்றார்.
1967ம் ஆண்டு முதல் முறையாக சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அந்த ஆண்டு நடந்த தேர்தலில் சைதாப்பேட்டையில் போட்டியிட்டார். அடுத்து 1971ம் ஆண்டும் அதே தொகுதியில் நின்றார், வென்றார்.
1977ம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா நகரில் போட்டியிட்டார். 1980ம் ஆண்டு மீண்டும் அண்ணா நகரை கைப்பற்றினார்.
1989ம் ஆண்டு துறைமுகத்திற்கு இடம் பெயர்ந்தார். அடுத்து 1991ல் நடந்த தேர்தலிலும் துறைமுகத்திலேயே வென்றார்.
1996ம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். தொடர்ந்து 2001, 2006 ஆகிய தேர்தல்களிலும் சேப்பாக்கம் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மொத்தம் 11 முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாகி சாதனை படைத்தவர் கருணாநிதி.