கொமுக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொங்கு நாடு முன்னேற்றக் கழமகம் போட்டியிடும் தொகுதிகள் விவரம்:
1.சூலூர்
2.பல்லடம்
3.பொள்ளாச்சி
4.உடுமலைபேட்டை
5.பெருந்துறை
6.கோபிசெட்டி பாளையம்
7.நாமக்கல்
இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்றும், கியாஸ் சிலிண்டர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கும்படி தேர்தல் கமிஷனை கேட்டுக்கொள்வோம் என்றும் அக் கட்சியின் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி நிருபர்களிடம் கூறினார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர்:
அதேபோல பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். கருணாநிதியை பெருந்தலைவர் மக்கள் கட்சி அமைப்பாளர் என்.ஆர்.தனபாலன் மற்றும்
நிர்வாகிகள் நேற்று சந்தித்துப் பேசியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தத் தொகுதியில் தனபாலனே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு சிதம்பரம்:
ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு திமுக சிதம்பரம் தொகுதியை ஒதுக்கியுள்ளது. இங்கு ஸ்ரீதர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
திமுக-கொமுக கூட்டணி ஒரு பந்தம்-கருணாநிதி:
திமுக, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்திற்கு இடையேயான கூட்டணி வெறும் ஒப்பந்தம் அல்ல பந்தம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
நேற்றிரவு அண்ணா அறிவாலயத்தில வைத்து அதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
அப்போது கருணாநிதி கூறியதாவது, நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார், சி.சுப்ரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர் திமுக அரசு கொங்கு மக்களுக்குத்
தேவையானவற்றை செய்து தர வேண்டும் என்று வலியுறுததினர். அப்போது அவர்களுக்கு துணையாக திமுக அரசின் சார்பில் பொறுப்பேற்றிருந்த கோவை செழியனும், திமுக அமைச்சரவையில் இருந்த கண்ணப்பனும் இதர நண்பர்களும் என்னை சந்தித்து
வன்னிய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததுபோல கொங்கு மக்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்களிடம் உங்கள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதியளித்தேன். அதை நான் காப்பாற்றினேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
எனக்கு கொங்கு நாட்டு மக்களின் விவேகத்திலும், வீரத்திலும் பாசத்திலும் என்றைக்குமே அதீத நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை இருந்ததால் தான், இருப்பதால் தான் பல வீரர்களுடைய சரித்திரங்களை எல்லாம் தொடர் ஓவியமாகத் தீட்டிய நான்,
பொன்னரையும், சங்கரையும் தொடர் ஓவியமாக தீட்டத் தொடங்கினேன்.
அத்தகைய வீரவரலாறு, திரையிலும் வெளிவர வேண்டும் என்பதற்காக இப்போது தேர்தலுக்கு முன்பே பொன்னர்-சங்கர் வெளிவரும் என்பதை நீங்கள் அறியலாம். இன்னும் சொல்லப்போனால், கோவை மண்ணிலே நான் பிறக்காவிட்டாலும் என்னுடைய தொழிலில் முக்கியமான கலைத்தொழிலை கோவை மண்ணிலேதான் தொடங்கினேன்.
இப்படி பழைய நினைவுகள் எல்லாம் இன்றைக்கு என்னை ஏதேதோ உணர்வுகளுக்கு ஆட்படுத்தினாலும்கூட எல்லாவற்றையும் மீறிய சக்தியாக நம்மிடையே உருவாகி இருக்கிற நட்பு சக்தி, இன்றைக்கு மலர்ந்திருக்கிறது என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
கொங்கு முன்னேற்றக்கழக நிர்வாகிகள் பேசும்போது இந்த ஒப்பந்தப்படி, திமுக
கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்கள். இது வெறும் ஒப்பந்தம் அன்று, பந்தம். இந்த பந்தம் அறுபடாமல் அரசியலிலே நாகரீகத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காப்பாற்றுகிற வகையில் நாம் ஈடுபட்டிருக்கிறோம் என்றால் அதைப்போன்ற பண்பாட்டை காப்பாற்றுகிற, கட்டிக்காக்கின்ற இயக்கமாக நீங்கள் உருவாக்கி இருக்கின்ற இந்த இயக்கமும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
எனவே, நாமிருவரும் சேர்ந்து ஓரணியாக நின்று இந்த தேர்தலில் வெற்று பெற்று ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் என்று சூளுரைத்து நீங்கள் தருகின்ற ஒத்துழைப்புக்கு முன்கூட்டியே என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.