கடையநல்லூரில் ஜெவை கண்டித்து மதிமுக ஆர்பாட்டம்: போக்குவரத்து பாதிப்பு
கடையநல்லூர்: ஜெயலலிதாவை கண்டித்து கடையநல்லூரில் மதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 160 தொகுதிகளில் அதி்முக நேரடியாக களம் இறங்குகிறது. மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் அதிமுக தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதாக கூறி மதிமுகவினர் நேற்று கிருஷ்ணாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு மதிமுக நகர செயலாளர் குமார் தலைமை வகித்தார். இதில் பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், துணை செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் தனித்து நிற்போம், தன்மானம் காப்போம் என கூறி ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று ஆர்பாட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.