விஜயகாந்த்துக்கு ரிஷிவந்தியம் 'குஷி' தருமா?

மிகமிக பின்தங்கிய கிராமங்களைக் கொண்ட தொகுதி இது. பல கிராமங்கள் குக்கிராமங்கள் ஆகும். இங்கு விவசாயம்தான் முக்கிய தொழில். மேலும் இது காங்கிரஸின் கோட்டையாகவும் கருதப்படுகிறது.
இந்தத் தொகுதியில் நான்கு முறை காங்கிரஸ் சார்பில் உறுப்பினராக இருந்தவர் சிவராஜ். தற்போது 5வது முறையாக எம்.எல்.ஏ. ஆகும் கனவுடன் கிளம்பியுள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதேசமயம் கேப்டன் பல்வேறு மனக் கணக்குகளுடன் இந்தத் தொகுதிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார் என்கிறார்கள்.
முதல் காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் தனது கட்சிக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக விஜயகாந்த் கருதுகிறார்.
2வது விஜயகாந்த்தின் மாமனாரின் சொந்த ஊரான மூங்கில்துறைப்பட்டு ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்டதாகும். எனவே அந்த வழியில் தனக்கு பெருமளவில் வாக்குகள் வரும் என்று நம்புகிறார் விஜயகாந்த். இந்தக் கணக்கில்தான் ரிஷிவந்தியத்தை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தனது மச்சான் சுதீஷை போட்டியிட வைத்தார் விஜயகாந்த் என்பது நினைவிருக்கலாம்.
லோக்சபா தேர்தலில் சுதீஷுக்கு 24,512 வாக்குகள் கிடைத்தன. அப்போது அவர் தனித்துப் போட்டியிட்டார். இப்போது அதிமுகவின் பலமும் கிடைத்திருப்பதால் வெற்றி எளிது என்பது கேப்டனின் கணக்காகும்.
இன்னொன்று இந்த தொகுதியில் உள்ள படிக்காத, வேலையில்லாத இளைஞர்கள், பாமரர்களைக் குறி வைத்து களம் இறங்கியுள்ளார் விஜயகாந்த். அவர்கள் மத்தியில் விஜயகாந்த்துக்கு நல்ல செல்வாக்கு உள்ளதாம். எனவே இந்த வாக்கு வங்கியை வளைத்தால் வெற்றி பிரமாதம் என்பது கேப்டன் தரப்பின் அபார நம்பிக்கை.
சம்பந்தமே இல்லாமல் விருத்தாச்சலத்தில் ஜெயித்தவராச்சே விஜயகாந்த், எனவே ரிஷிவந்தியத்திலும் அவருக்கு குஷி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications