தேர்தல் ஆணையம் முன்பு ஆஜராக டிஜிபி, கூடுதல் டிஜிபிக்கு சம்மன்
மதுரை: தேர்தல் ஆணையம் முன்பு ஆஜராகுமாறு தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. போலேநாத், கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறகிறது. இதனால் தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த தேர்தலில் திமுக அரசுக்கு சாதகமாக தமிழக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஜாபர் சேட், உளவுத்துறை எஸ்.பி. சந்திரசேகர், பல்வேறு மாவட்ட எஸ்.பிக்கள், கலெக்டர்கள் ஆகியோர் செயல்பட்டு வருவதாக அதிமுக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.
இதனையடுத்து தமிழக டி.ஜி.பி. மற்றும் பல்வேறு மாவட்ட எஸ்.பி.க்கள், கலெக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஜாபர் சேட்டுக்கு கடந்த 21-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அவரும் தேர்தல் ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனை நிராகரித்த தேர்தல் ஆணையம் ஜாபர் சேட்டை நீண்ட விடுப்பில் செல்ல அறிவுறித்தியதாக தகவல் வெளியானது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தேர்தல் ஆணையம் முன்பு ஆஜராகுமாறு தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. போலேநாத், கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை இருவரும் தேர்தல் ஆணையம் முன்பு ஆஜராகிறார்கள்.