மணற் கொள்ளையில் ஈடுபெடும் பெரும் புள்ளிகளை சிறையில் தள்ளுவேன்-ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
கரூர்: திமுகவின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுத் தருவோம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மணற் கொள்ளையில் ஈடுபடும் பெரும் பெரும் புள்ளிகளை சிறையில் தள்ளுவேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கரூரில் இன்று பிற்பகல் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டு பேசினார். அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:

இது மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல. மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தல். அடிமைத்தளையிலிருந்து மக்களை விடுவிக்க நடத்தப்படும் தேர்தல் .

திமுக ஆட்சியின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். அதில் மக்களை வெகுவாக பாதித்தது விலைவாசி பிரச்சினை. விலைவாசியைக் குறைக்க கருணாநிதி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா என்றால் இல்லை. மாறாக விலைவாசி உயரத்தான் அவர் வழி வகுத்தார்.

அரசி கடத்தலை ஊக்குவித்தார், பதுக்கல்காரர்களுக்குப் பக்க பலமாக இருந்தார். டீசல் விலை உயரக் காரணமாக இருந்தார். மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு ஆதரவளித்தார். பெட்ரோல் விலைக்கு ஆதரவாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு, 15 ரூபாய் அதிகரித்துள்ளது.

கிலோ 15 ரூபாய்க்கு விற்ற அரிசி இன்று 42 ரூபாய். 13 ரூபாய் சர்க்கரை 35 ரூபாய், 25 ரூபாய் துவரம் பருப்பு 90 ரூபாய், 35 ரூபாய் புளி 110 ரூபாய்க்கு விற்கிறது.

மணற் கொள்ளை மூலம் ரூ. 50,000 கோடி, கிரானைட் கற்கள் கொள்ளை மூலம் ரூ. 80,000 கோடி என கருணாநிதி குடும்பத்தினர் கொள்ளையடித்துள்ளனர். 2005க்கு விற்ற ஒரு லோடு மணல் இன்று ரூ. 13,000 ஆக விற்கிறது. 150க்கு விற்ற ஒரு மூடை சிமென்ட் இன்று ரூ. 280க்கு விற்கிறது. 3 ரூபாய்க்கு விற்ற செங்கலின் விலை 6 ரூபாய். இனி கனவில்தான் வீடு கட்ட முடியும்.

அடுத்த முக்கியப் பிரச்சினை மின்வெட்டு. கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர் மின் உற்பத்தி பெருகவில்லை, மாறாக மின்வெட்டுதான் பெருகி விட்டது. மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர் மின்வெட்டு மாநிலமாக மாறியுள்ளது. தொழில் உற்பத்தி குறைந்து, விவசாய விளைச்சல் வீழ்ச்சியடைந்து, ஜவுளித் தொழில் நசிந்து பொருளாதாரம் நலிவடைந்து விட்டது. சட்டம் ஒழுங்கு இல்லாமலேயே போய் விட்டது.

தமிழகத்தில் நடைபெறுவது ஆட்சியே இல்லை. ஒரு ரவுடிக் கும்பல் தமிழக மக்களை அடக்கி ஆள்கிறது. காவல்துறை கருணநிதியின் ஏவல் துறையாகி விட்டது. உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல். நிலவுகிறது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதே கருணாநிதியின் தராக மந்திரம்.

1 லட்சம் கோடிக்கு மேல் தமிழக அரசின் கடன் உள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் 1.80 லட்சம் கோடி ரூபாயை சம்பாதித்துள்ளனர் கருணாநிதி குடும்பத்தினர்.

கருணாநிதி குடும்ப டிவிகள் அனைததும் இந்த ஊழல் பணத்திலிருந்துதான் ஆரம்பிக்கப்பட்டன. இந்தப் பணம் அரசுக்கு்க கிடைத்திருந்தால் நாடு வளம் பெற்றிருக்கும். ஆனால் தற்போது வளம் பெற்றிருப்பது கருணாநிதி குடும்பம் மட்டும்தான். மக்கள் பணத்தை சுருட்டி தன் மக்களை கோடீஸ்வரர்களாக்கிய ஒரே முதல்வர் கருணாநிதி மட்டுமே.

லஞ்ச ஊழல் ஆட்சியால் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காலாவதி மருந்து, கள்ள லாட்டரிச் சீட்டு விற்பனை என்று பல வழிகளிலும் கருணாநிதி குடும்பத்திற்கு பணம் சென்று கொண்டேதான் உள்ளது.

அரசுத் திட்டங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு அடியோடு இல்லை. மத்திய அரசில் அங்கும் வகித்தும் மக்கள் பிரச்சினகைளைத் தீர்க்க கருணாநிதிக்கு முடியவில்லை. காவிரி இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியக் கூடச் செய்ய முடியவில்லை அவரால்.

முல்லைப் பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. பாலாற்றில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த கருணாநிதியால் முடியவில்லை.

அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த ஒரே அரசு கருணாநிதி அரசுதான். ரியல் எஸ்டேட் வேலையைத்தான் கருணாநிதி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

கரூரில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பெரிய புள்ளிகள் கம்பி எண்ணுவார்கள். நூல் விலை உயர்வைக் குறைத்து ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், சாயக் கழிவு பிரச்சினைக்கு நீரந்தரத் தீர்வு காணவும், புதிய காவிரி குடிநீர்த் திட்டம் அமையவும், பழைய அமராவதி பாலத்தையொட்டி புதிய பாலம் அமைக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழி இணைப்புச் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு ஓட்டுக்கு ரூ. 1 லட்சம் வரை கூட கொடுக்கக் கூடிய அளவில்திமுகவினர் உள்ளனர். அவர்கள் பணத்தோடு வருவார்கள். அதைப் பெற்றுக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அது உங்கள் பணம்தான். அதை வாங்கிக் கொண்டு, மனசாட்சி சொல்வது போல செய்யுங்கள் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+