மோதலில் ஈடுபட்ட திமுக எம்பி ஜே.கே.ரித்தீஷ் உள்பட 6 பேர் கைது
ராமேஸ்வரம்: திமுகவினருக்கும், அதிமுக-தேமுதிக கூட்டணியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் திமுக எம்.பியான நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று களவங்குடியில் புதிதாக ரோடு போட பஞ்சாயத்து அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அப்போது உள்ளூர் மக்களுக்கும் திமுக எம்.பி. ரித்தீஷ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இத்தனை காலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கையை தற்போது தேர்தல் வருவதால் தான் நிறைவேற்றுகின்றனர் என்று மக்கள் குற்றம் சாட்டினர்.
அப்போது முன்னாள் அதிமுக அமைச்சர் வ.து.நடராஜன் அங்கு வந்தார். அவர் மக்களுடன் சேர்ந்து கொண்டு அதிகாரிகளிடம் எப்பொழுது ரோடு போடும் பணிகள் துவங்கும் என்று கேட்டார். அவரும் தேர்தல் வருவதாலேயே ரோடு போடுவதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையே தனது ஆதரவாளர்களுடன் அங்கு ரித்தீஷ் குமார் வந்தார். அவர்கள் உள்ளூர் வாசியான நாராயணன் என்பவரை தாக்கினர். மேலும் அதிமுகவினர் மீது கல் எறிந்தும், கம்பால் அடித்தும் தாக்குதல் நடத்தினர். இதில் நாராயணன் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து ரித்தீஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ரித்தீஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.