சபரிமலை விபத்து-பலியான 102 பக்தர்கள் குடும்பத்துக்கு 2 மாதத்திற்கு பின் நிதியுதவி
திருவனந்தபுரம்: சபரி்மலை புல்மேட்டில் மகரவிளக்கு தினத்தன்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 102 பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.5 லட்சம் நிவாரண நிதி நாளை முதல் வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜையன்று புல்மேட்டில் ஏற்பட்ட பயங்கர நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களே அதிகமாக இறந்தனர். கேரளாவைச் சேர்ந்த 4 பக்தர்கள் இறந்தனர். நெரிசலில் இறந்த பக்தர்களின் குடும்பத்துக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டும், கேரள அரசும் சேர்ந்து ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிப்பதாக அறிவித்தது.
ஆனால் விபத்து நடந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை நிவாரண நிதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.2.5 லட்சம் நிவாரண நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
நாளை கேராளவைச் சேர்ந்த 4 பக்தர்களின் குடும்பத்தினருக்கு நிதி வழங்கப்படுகிறது. அடுத்த வாரத்தில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு தேவசம்போர்டு நிர்வாகிகள் நேரடியாக சென்று வழங்குவார்கள்.
இந்நிலையில் கேரள அரசும் நிவாரண நிதியை விரைவில் வழங்க வேண்டும் என விபத்தில் பலியான பக்தர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.