'வைகோ': முட்டை குஞ்சு பொரிக்கட்டும்-தா.பாண்டியன் கிண்டல்

நிருபர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் சில நாட்களில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. கோவையில் கூட்டணி கட்சி சார்பில் கூட்டம் நடந்தது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். தேமுக சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்றார். பிரச்சனை, பிளவு ஏதுமில்லை.
இந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும், அதை மாற்ற எந்த சக்தியாலும் முடியாது. ஓட்டுப் பதிவுக்கு சில நாட்களே உள்ளதால் திமுகவினர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவர். எனவே, காவல் துறையினர் விழிப்புடன் இருக்க வேண்டும். கூட்டணி கட்சியைச் சேர்ந்த இளைஞர்களும் சமூக விரோதச் செயல்களைத் தடுக்க முன்முயற்சியில் ஈடுபட வேண்டும்.
கோவை கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்காததால் மக்கள் மாற்றி ஓட்டு போட்டு விட மாட்டார்கள். அவருக்குப் பதில் தான் பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்றாரே. எங்களுக்குள் எந்த பிரச்சனையுமில்லை என்றார்.
வரும் 10, 11ம் தேதி வைகோ ஏதோ அறிவிப்பதாகக் கூறி வருகிறாரே? என்று கேட்டதற்கு, முட்டை குஞ்சு பொரிக்கும் போது தான் அது கோழியா, சேவலா? எனத் தெரியும். அப்போது பார்ப்போம் என்றார் பாண்டியன்.
கூட்டணியில் பிரச்சனையில்லை-மார்க்சிஸ்ட்:
இந் நிலையில் நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் அதிமுக ஆட்சி அமையும். திமுக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சிறுதொழில்கள் நசுக்கப்பட்டது, ஊழல் போன்ற விஷயங்கள் மக்களைப் பாதித்திருக்கின்றன. எனவே பெரும்பாலான மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
அதிமுக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications