நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்ற கொல்கத்தா பெண்
டெல்லி: கொல்கத்தாவைச் சேர்ந்த சச்சினின் மனைவி சித்ரா ராகவ்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு மே மாதம் 10ம் தேதி குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருந்தனர். முதல் பிரசவம் என்பதால் சித்ராவை டெல்லியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு நேற்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அழைத்து வந்தார் சச்சின்.
நேற்று காலை 7.15 மணிக்கு விமானம் கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் சித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
8.30 மணியளவில் சித்ராவுக்கு வலி மிகவும் அதிகமானது. இதையடுத்து விமானத்தில் பயணம் செய்த மைதி-அர்பிதா என்ற டாக்டர் தம்பதி சித்ராவை விமானத்தின் வால் பகுதிக்குக் கொண்டு சென்று, பிரசவம் பார்த்தனர்.
எந்தக் கருவிகளும் இல்லாத நிலையில், ஒரு பிளேடு மற்றும் ஒரு ரப்பர் பேண்ட் உதவியுடன் பிரசவத்தை நடத்தி முடித்தனர். சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
9.30 மணிக்கு அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கியது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சித்ராவையும், குழந்தையையும் டாக்டர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications