மாதவரத்தில் ரசாயன கிடங்கில் பயங்கர தீ: போராடும் தீயணைப்பு வீரர்கள்
சென்னை: மாதவரம் ஜி.என்.டி. சாலையில் உள்ள தனியார் ரசாயனக் கிடங்கில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாதவரம் ஜி.என்.டி. சாலையில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ரசாயன கிடங்கு உள்ளது. ஆதிகேசவலு என்பவருக்கு சொந்தமான இந்த கிடங்கில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர்.
இங்கு பாஸ்பரஸ் போன்ற முக்கிய எரிபொருள் ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் ராக்கெட்களுக்கு இங்கிருந்து தான் பாஸ்பரஸ் உள்ளிட்ட ரசாயனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இன்று சில தொழிலாளர்கள் பாஸ்பரஸை கண்டெய்னர்களில் ஏற்றி சீல் வைத்துக் கொண்டிருக்கையில் பாஸ்பரஸ் கீழே கொட்டி தீப்பற்றியது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். சிறிது நேரத்தில் தீ ரசாயன கிடங்கு முழுவதும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த செம்பியம், பெரம்பூர், புளியந்தோப்பு, செங்குன்றம், மணலி போன்ற பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ரசாயனம் என்பதால் தீயின் தாக்கம் அதிகம் உள்ளது. தீயணைப்பு வீரர்களால் கிடங்கிற்குள் செல்ல முடியவில்லை. உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்று தெரியவில்லை. மேலும் பல பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வந்து சேர்ந்தன.
மாதவரம் துணை கமிஷனர் ஆனி விஜயா, உதவி கமிஷனர் செல்வராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இன்னும் சேத மதிப்பு கணக்கிடப்படவில்லை.
இன்று விடுமுறை என்பதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ரசாயன கிடங்கின் பின்புறம் கனகம்மாசத்திரம் என்ற பகுதி உள்ளது.
இங்கு தீ பரவி விடுமோ என்ற பீதியில் 100-க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டனர். இந்த தீ விபத்தால் மாதவரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.