என்னை நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரமில்லை-எஸ்.வி.சேகர்
தனக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, முன்னாள் சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்பட 19 பேரை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு திடீரென கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.
இது குறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், நான் ராகுல் காந்தியை சந்தித்து அவர் மூலம் காங்கிரசில் சேர்ந்தேன். எம்.எல்.ஏவாகவும் இருக்கிறேன். என்னிடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டு எனது பதிலில் திருப்தி இல்லை என்றால் மட்டுமே நீக்க முடியும்.
தங்கபாலுவால் நீக்கப்பட்டுள்ள பலர் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்கள். தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்டவர்கள். ராகுல் காந்திதான் அவர்களுக்கு தலைவர்.
எனவே இளைஞர் காங்கிரசாரையும் தங்கபாலுவால் நீக்க முடியாது.
தேர்தலில் தங்கபாலுவுக்கு டெபாசிட் போய்விடும் என்ற பயம் வந்து விட்டது. நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் வருவார் என்கிறார்கள். இதனால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.கவுடனோ அல்லது தி.மு.கவுடனோ கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்து துணை முதலவர் ஆகிவிடலாம் என்று கனவு கண்டார். இதனால் லட்சக்கணக்கான தொண்டர்களை ஏமாற்றினார். மனைவி மூலம் தேர்தல் கமிஷனையும் ஏமாற்றினார். இப்போது தோல்வி உறுதி என தெரிந்ததும் எங்கள் மேல் பாய்கிறார்.
மைலாப்பூர் தொகுதியில் சீட் கிடைக்கவில்லை என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. தொகுதி மக்கள்தான் வருத்தப்பட்டனர். ஆனாலும் தொகுதியில் 10 இடங்களுக்கு போய் காங்கிரசுக்காக தேர்தல் பிரசாரம் செய்து விட்டு வந்தேன்.
நான் தங்கபாலுவுக்காக காங்கிரசில் சேரவில்லை. அவர் காங்கிரசை அழித்துக் கொண்டு இருக்கிறார். தங்கபாலு நூறு சீமான்களுக்கு சமம். தேர்தலில் மட்டுமேதான் சீமான் காங்கிரசை அழிக்க பிரசாரம் செய்கிறார். தங்கபாலு தினம் தினம் காங்கிரசை அழிக்கிறார். தங்கபாலு விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
அவரை நீக்க வேண்டும் என்று சோனியாவுக்கும், ராகுல் தொண்டர்கள் கடிதங்களும், தந்திகளும் அனுப்ப வேண்டும்.
தங்கபாலுவின் தனிப்பட்ட சுயநலம் தி.மு.கவுக்கு பெரிய சுமையாக போய்விட்டது. இவர் நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சி 10 அல்லது 13 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும் நிலைமை உள்ளது.
நான் பொது வாழ்வில் சுத்தமானவன், எப்போதும் ஊழலுக்கு எதிராக இருப்பேன். காங்கிரஸ் என்னை பயன்படுத்தாவிட்டால் அன்னா ஹசாரே இயக்கத்தில் சேருவேன். ரஜினி வார்த்தையில் சொல்வது என்றால் தங்கபாலு தலைவராக இருக்கும் வரை காங்கிரஸ் கட்சியை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றார் சேகர்.
வாசனுடன் சேகர் சந்திப்பு:
இந் நிலையில் எஸ்.வி.சேகர் இன்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனை சென்னையில் அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.
வாசனுக்கு சந்தித்து தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததாக பின்னர் அவர் கூறினார்.