மதுரையில் பிரபல ஜவுளிக்கடையில் தீ: ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்
மதுரை: மதுரையில் பிரபல ஜவுளிக்கடையில் இன்று அதிகாலை திடீர் என்று தீப்பிடித்தது. இதில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமடைந்தன.
மதுரை தெற்கு சித்திரை வீதியில் நயினார்நம்பி, அகமது, ரகமத்துல்லா, தீன் ஆகிய அண்ணன், தம்பிகள் 4 பேர் சேர்ந்து தீன் பிரதர்ஸ், அகமது பிரதர்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடைகள் நடத்தி வருகின்றனர். இது அந்தப் பகுதியில் பிரபல ஜவுளிக்கடை ஆகும்.
இந்த கடையோடு குடோனும், மாடியில் வீடும் உள்ளது. அந்த வீட்டில் நயினார் நம்பி தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். அந்த வீட்டில் குழந்தைகள் உள்பட 6 பேர் உள்ளனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் வீடு திடீர் என்று தீப்பிடித்தது. தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று விழித்து வீட்டைவிட்டு வெளியே ஓடினர். சிறிது நேரத்திலேயே வீடு, கீழே உள்ள கடை மற்றும் குடோனுக்கு தீ பரவியது.
இது குறித்து திடீர்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென் மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குனர் சாகுல் அமீது, கோட்ட அலுவலர் கருப்பையா ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஜவுளிக்கடை குடோனில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள ஜவுளிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஜவுளி மற்றும் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், பீரோ அதில் இருந்த நகைகள் உள்பட ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.