சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஜாமீனில் விடுதலை
பெங்களூர்: கடந்த ஆறு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஒரு வழியாக இன்று விடுதலையானார்.
கர்நாடகத்தில் முத்துலட்சுமி மீது ஐந்து வழக்குகள் தொடரப்பட்டன. அவை அனைத்திலும் அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார். இதையடுத்து அவரை விடுதலை செய்ய பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை நிர்வாகம் தயாரானது.
இந்த நிலையில் தமிழக காவல்துறையிடமிருந்து பெங்களூர் சிறைக்கு ஒரு தகவல் வந்தது. அதில் கோபிச்செட்டிப்பாளையம் கோர்ட்டில் முத்துலட்சுமி மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை விடுதலை செய்யாமல் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை கோரியது.
இதையடுத்து நேற்று முத்துலட்சுமியை தமிழக போலீஸாரிடம் பெங்களூர் சிறை நிர்வாகம் ஒப்படைத்தது.
இதையடுத்து முத்துலட்சுமியை தமிழக போலீஸார் கோபிச்செட்டிப்பாளையம் கொண்டு சென்று அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது முத்துலட்சுமி சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த கோபி கோர்ட், முத்துலட்சுமிக்கு ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து முத்துலட்சுமி மறுபடியும் பெங்களூர் சிறையில் ஒப்படைக்கப்பட்டார். அங்கிருந்து இன்று அவர் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த முத்துலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடவுள் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு. எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதும் எனக்குத் தெரியும். எனது கணவர் செய்த குற்றங்களுக்காக நான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வீரப்பனுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அங்கு போய் விவசாயம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். அதேசமயம், தமிழகத்தின் மேட்டூரில் நிரந்தரமாக வசிக்கவும் விரும்புகிறேன்.
எனது கணவரைப் பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படையினர் செய்த கொடுமைகளை புத்தகமாக எழுதத் திட்டமிட்டுள்ளேன்.
எனக்கு முன்பு அரசியல் ஆசை இருந்தது. ஆனால் இப்போது அதுகுறித்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.
நான் பாதிக்கப்பட்டாலும் கூட எனது இரு மகள்களுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது மகிழ்ச்சி தருகிறது. அவர்கள் வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் முத்துலட்சுமி.
+
வீரப்பனின் இரு மகள்களும் சென்னையில் தங்கிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். முதல் மகள் பி.ஏ.வும், 2வது மகள் பொறியியல் படிப்பும் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள முத்துலட்சுமி, மே 19ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என கோபி கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.