ரூ. 200-க்கு சிமெண்ட் திட்டம்: அல்லாடும் கடையநல்லூர் பயனாளிகள்
கடையநல்லூர்: ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்டுவதற்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் 200 ரூபாய்க்கு சிமிண்ட் வழங்கும் திட்டம் கடையநல்லூர் பகுதியில் சரிவர செயல்படாததால் பயனாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் மூலம் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக கட்டுமானப் பணிகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தலைமைச் செயலக கட்டிடம் முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
அத்துடன் தனியார் நிறுவனங்களுக்கும் ஏராளமான கட்டிடங்களை கட்டப்பட்டு வருகிறது. இதனால் கட்டுமானப் பொருட்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சிமிண்ட் விலை அதிகரித்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் வீடுகட்ட முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு ஏழை, நடுத்தர மக்கள் வீடுகட்ட சலுகை விலையில் 200 ரூபாய்க்கு சிமிண்ட் வழங்கியது. ஆயிரம் சதுர அடி வீடு கட்டுபவர்களுக்கு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் 200 ரூபாய்க்கு சிமிண்ட் மூடை வழங்க நடவடிக்கை எடுத்தது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் மாதம் 4370 டன்கள் சிமிண்ட் அரசிடம் இருந்து பெறப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் பயனாளிகளுக்கு 200 ரூபாயில் சிமிண்ட் மூடை வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடையநல்லூர் பகுதியில் ஆயிரம் சதுர அடிக்குள் வீடுகட்டும் ஏழை, நடுத்தர மக்கள் தென்காசி சிவில் சப்ளை அலுவலகத்தில் சிமிண்ட் பெறுவதில் சிரமப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். சிமிண்ட் வழங்க தாமதப்படுத்தி வருவதால் குறிப்பிட்ட நாளில் வீடுகட்டி முடிக்க முடியாமல் திணறுவதாக பலர் புகார் தெரிவிக்கின்றனர்.
முக்கியஸ்தர்களுக்கும் கூடுதலாக 20 அல்லது 30 ரூபாய் டிப்ஸ் கொடுப்பவர்களுக்கும் மட்டுமே சிமிண்ட் வழங்குவதில் சம்பந்தப்பட்ட துறையினர் முன்னுரிமை கொடுப்பதாக கடையநல்லூர் பகுதியில் உள்ள பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, வீடு கட்டி வரும் ஏழை, நடுந்தர மக்கள் நலன் கருதி குறிப்பிட்ட காலத்தில் 200 ரூபாய்க்கு சிமிண்ட் வழங்க மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.