ஈழத் தமிழர்களைக் கைவிட்ட காங்கிரஸுக்கு தமிழக மக்கள் சம்மட்டி அடி
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதுவரை அதிமுக, திமுகவுடன் ஓசி சவாரி செய்தே சீட்களை அள்ளி சொகுசாக இருந்து வந்த காங்கிரஸுக்கு இந்த தேர்தலில் மக்கள் கடும் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.
4 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது. திமுகவை கடுமையாக மிரட்டி, உருட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து பாலிட்டிக்ஸ் செய்து அதிக அளவிலான தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் செய்த கபட நாடகங்கள், போர்க்குற்றவாளி என ராஜபக்சேவை ஐ.நா. குழு அறிவித்த பிறகும் கூட அவரைக் காப்பாற்ற காங்கிரஸ் மேலிடம் துடிப்பது என காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விஷயங்கள் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் கவிழ்த்து விட்டுள்ளது.
மேலும் உட்கட்சிப் பூசல், கோஷ்டி கலவரங்கள், ஆளாளுக்கு நாட்டாமை, தங்கபாலுவின் தான்தோன்றித்தனம் ஆகியவையும் கூட காங்கிரஸுக்கு வேட்டு வைத்து விட்டது.
தங்கபாலு மயிலாப்பூரில் வேட்பாளராக நிற்க செய்த தகிடுதத்தனங்களும் காங்கிரஸாரையே கடுப்பாக்கி விட்டது. இத்தனையும் சேர்ந்து இன்று காங்கிரஸை காலி செய்துள்ளது.