சட்டசபை இந்திய கம்யூனிஸ்ட் தலைவராக ஆறுமுகம் தேர்வு
சென்னை: சட்டசபை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக எம்.ஆறுமுகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய சட்டசபை கட்சித் தலைவர்களை ஒவ்வொரு கட்சியும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றன. இதுவரை அதிமுக கூட்டணிக் கட்சிகள்தான் இதில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணி இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
நேற்று சிபிஎம் கட்சியின் சட்டசபை கட்சித் தலைவராக செளந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலையில் நடந்த சிபிஐ கூட்டத்தி்ல ஆறுமுகம் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
10 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஐ ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே தோற்று மற்ற 9 தொகுதிகளையும் அள்ளியது.
புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில், தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோரது முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.
அதில் தலைவராக வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறுமுகம், கோவை மாவட்ட செயலாளராக இருக்கிறார். 1980ம் ஆண்டு அவினாசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று உறுப்பினராகியுள்ளார்.
துணைத்த தலைவராக சிவகங்கை குணேசகரன், கொறடாவாக திருத்துறைப்பூண்டி உலகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆறுமுகம் மட்டுமே தலைவர் பதவிக்குப் புதியவர். மற்ற இருவரும் கடந்த சட்டசபையிலும் அதே பதவிகளில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.