ஜூன் 15 முதல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. விண்ணப்ப வினியோகம்: விலை ரூ. 300
கோவை: எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரும் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
இது குறித்து தொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் 2011- 2012 கல்வி ஆண்டிற்கான எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரும் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
குறிப்பிட்ட அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 300. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ரூ. 150 மட்டுமே.
உரிய விண்ணப்ப கட்டணத்தை செயலாளர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. அட்மிஷன்ஸ்-2011, அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாகச் செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் சலுகை கட்டணத்தில் விண்ணப்பம் பெறும்போது சாதிச் சான்று நகலை சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் கோவை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும்.
இதற்கான அழைப்புக் கடிதம் தகுதியுள்ள மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.