கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு-ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இதனால் இன்று எப்படியும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்து டெல்லிக்கு வந்த திமுக தலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட ரூ. 200 கோடி பணம் தொடர்பான சிக்கலில் கனிமொழி சிக்கியுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலால் கிடைத்த லஞ்சப் பணம் தான் சினியுக் நிறுவனம் மூலம் கடன் தொகை என்ற பெயரில் கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது சிபிஐயின் வாதமாகும்.
இந்த வழக்கில் கலைஞர் டிவியில் பங்குகள் வைத்துள்ள கனிமொழியும், அதன் நிர்வாக இயக்குநர் ரெட்டியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக இருவரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இருவரும் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியபோது, இருவரும் குற்றம் செய்திருக்கலாம், ஊழலில் பலனடைந்திருக்கலாம் என்பதற்கான பூர்வாங்கம் இருப்பதால் இருவரையும் வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கக் கூடும் என்பதால் ஜாமீன் மறுக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் கூறி விட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை இருவரும் நாடினர். இது விடுமுறைக் கால பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.எஸ்.செளஹான் மற்றும் ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனு மீதான விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.