ஸ்பெக்ட்ரம் ஊழல் அறிக்கை: ஜோஷியின் அறிக்கையை நிராகரித்த சபாநாயர் மீரா
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் அலுவலகமே பொறுப்பு என்று குற்றம் சாட்டி நாடாளுமன்ற பொதுக் குழுவின் தலைவராக இருந்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி அனுப்பிய 270 பக்க அறிக்கையை மக்களவை சபாநாயகர் மீரா குமார் நிராகரித்து ஜோஷிக்கே திருப்பி அனுப்பி விட்டார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இருந்த நாடாளுமன்றப் பொது கணக்கு குழு விசாரித்தது. பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பதவிக் காலம் முடிவதற்கு 1 நாள் முன்பதாக, இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சியினருடன் ஆலோசனை நடத்தாமல் தானே ஒரு அறி்க்கையை தயார் செய்தார் ஜோஷி.
அதில் மத்திய அரசையும் பிரதமர் அலுவலகத்தையும் கடுமையாக குறை கூறியிருந்தார் ஜோஷி. பிரதமர் அலுவலகமே 2ஜி ஊழலுக்குப் பொறுப்பு என குற்றம் சாட்டியிருந்தார். தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராசா இந்த ஊழலை செய்யாமல் தடுக்க பிரதமர் அலுவலகமும் மத்திய அமைச்சரவை செயலாளரும் தவறிவிட்டனர் என்று அதில் ஜோஷி கூறியிருந்தார்.
இதை மிகக் கடுமையாக எதிர்த்த குழுவின் இருந்த காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள், ஜோஷியின் அறிக்கையை ஏற்க மறுத்து கலாட்டா செய்தனர். இதையடுத்து அவர் வெளிநடப்பு செய்யவே, அவரை பதவியை விட்டு நீக்க தீர்மானம் போட்டனர்.
ஆனாலும் தனது குழுவினரால் நிராகரிக்கப்பட்ட அந்த அறிக்கையை ஜோஷி சபாநாயகர் மீரா குமாருக்கு அனுப்பி வைத்தார்.
அந்த அறிக்கையை தற்போது சபாநாயகர் மீராகுமார் நிராகரித்து ஜோஷிக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.