அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என பாடம் நடத்துகிறார் ஜெயலலிதா-செல்லூர் ராஜு
தேனி: அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தினசரி எங்களுக்கு பாடம் நடத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு.
வைகை அணையிலிருந்து நேற்று பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதா, காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக ஜுன் மாதம் முதல் தேதியே தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.
அமைச்சர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நாள்தோறும் எங்களுக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளை பாடம் போன்று எடுத்து கூறுகிறார். அவரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த ஆட்சியில் விவசாய வளம் கொழிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
முதல்வர் உத்தரவின் பேரில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வந்துள்ளேன். மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் இன்றைக்கு திறந்து விடப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications