தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் 5 முதல் 50% வரை உயர்வு-முதல்வரை சந்திக்க நிர்வாகிகள் முடிவு
சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரத்தை ரவிராஜ பாண்டியன் கமிட்டி வெளியிட்டுள்ளது. இதில் பள்ளிகளுக்கான கட்டணம் 5 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு குறித்து சிலர் திருப்தி வெளியிட்டுள்ளனர். சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதிருப்தி அடைந்துள்ள பள்ளிகள் வழக்கு தொடர விரும்பாமல் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து முறையிடப் போவதாக கூறியுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் தாறுமாறாக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் குமுறல் வெளியிட்டதைத் தொடர்ந்து கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, பல்வேறு ஆய்வுகளை நடத்தி பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்தது.
ஆனால் இதை பெரும்பாலான பள்ளிகள் ஏற்கவில்லை. 6400 பள்ளிகள் உயர்நீதிமன்றத்தை அணுகின. இந்த நிலையில் கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போய் விட்டார். இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் புதிதாக பொறுப்புக்கு வந்தார்.
அவர் மீண்டும் ஆய்வு நடத்தி புதிய கட்டண விகிதத்தை உருவாக்கி அந்தப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. நேற்று தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அந்த கட்டண விவரம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் பெரும்பாலான பள்ளிகளுக்கு 5 சதவீத உயர்வு தரப்பட்டுள்ளது. சில பள்ளிகளுக்கு 50 சதவீத அளவுக்கு உயர்வு தரப்பட்டுள்ளது. இருப்பினும் கட்டண விகிதம் குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதிருப்தி அடைந்துள்ள பள்ளி நிர்வாகிகள், இதுகுறித்து மீண்டும் வழக்குத் தொடுக்க விரும்பவில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதாவை அணுகி நிவாரணம் காணப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications