திருப்பத்தூர் திமுக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து ராஜ கண்ணப்பன் வழக்கு !
இது குறித்து சென்னை உயர் நீதி மன்றத்தில் திருப்பத்தூர் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டேன். தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் போட்டியிட்டார்.
இவர் ஏற்கனவே அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்தார். தேர்தல் நடைபெற்ற போது அவர் சார்ந்திருந்த தி.மு.க. கட்சி ஆட்சி பதவியில் இருந்தது.
முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தன் பதவியை தவறாக பயன்படுத்தி ஓட்டு எந்திரத்தில் மோசடி செய்து, மாவட்ட தேர்தல் அதிகாரியும், தொகுதி தேர்தல் அதிகாரியும் சேர்ந்து அவரை வெற்றிப்பெற வைத்துள்ளனர். இது மோசடியான வெற்றியாகும்.
தேர்தல் முடிவில், பெரியகருப்பன் 83 ஆயிரத்து 485 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், அவருக்கு அடுத்தப்படியாக 81 ஆயிரத்து 901 ஓட்டுகளை நான் பெற்றதாகவும், தேர்தல் அதிகாரி அறிவித்தார். எங்களுக்கு இடையே இருந்த ஓட்டு வித்தியாசம், 1,584 ஓட்டுகள் தான்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ருந்த காரைக்குடி அழகப்பா செட்டியார் கல்லூரியில் போதிய பாதுகாப்பு தரப்படவில்லை.
அங்கிருந்த வாக்கு பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை மாற்றி அமைக்க முயன்ற ஒருவரை மே 12 ம் தேதி எனது தேர்தல் ஏஜெண்ட் கருப்பையா கையும் களவுமாக பிடித்து, அதை அவர் அவரது செல்போன் கேமரா மூலம் படம் பிடித்து வைத்துள்ளார்.
ஒரு சில வாக்குப் பதிவு எந்திரங்களில் பேப்பர்கள், சீல் எண்கள் வித்தியாசமாக இருந்தன. மேலும், சில எந்திரங்களில் உள்ள பேப்பர்களில் தேர்தல் ஏஜெண்டுகள் கையெழுத்து மாறுபட்டு இருந்தது. இது பற்றிய எங்கள் எதிர்ப்புகளை அதிகாரில் யாரும் காது கொடுத்து கேட்கவில்லை.
இந்த நிலையில், தேர்தல் முடிவு அதிகாலை 3.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் எண்ணிக்கை மையத்தில் இருந்த காவலாளி சுட்டு கொல்லப்பட்டார்.
ஒரு மாதமாக ஓட்டு எந்திரங்களை காவல்காத்த அவருக்கு அங்கு நடந்த அத்தனை மோசடியும் தெரியும். அதனால் தான் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது.
இது போன்று பல தேர்தல் விதிமீறல்களில் தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளனர். எனவே திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அந்த தேர்தலில் என்னை வெற்றிப் பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா சிவகங்கை பாரளுமன்ற தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளர் ராஜகண்ணப்பன் தான் வெற்றி பெற்றார். ஆனால் ப.சிதம்பரம் மோசடியான வெற்றி பெற்றுள்ளார். எனவே அவர் பதவி விலக வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடதக்கது .