தில்ஷன் வழக்கு: கூவத்தில் வீசப்பட்ட தோட்டாக்களைத் தேடும் மீனவர்களுக்கு சரக்குடன் கூலி ரூ. 700
சென்னை: தில்ஷனை சுட்டுக் கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராமராஜ் கூவத்தில் வீசிய துப்பாக்கிக் குண்டுகளில் 8 கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு போலீசார் சரக்கு வாங்கிக் கொடுத்து கூலியாக ரூ. 700 கொடுத்து தேடி வருகின்றனர்.
தீவுத்திடலில் உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் பாதாம் பழம் பறிக்கச் சென்ற 13 வயது சிறுவன் தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் கந்தசாமி ராமராஜ் கைது செய்யப்பட்டார். அவர் கொலை செய்ய பயன்படு்த்திய நவீன ரக துப்பாக்கியையும், அதன் குண்டுகளையும் யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க அவற்றை நேப்பியர் பாலம் அருகே கூவத்தில் வீசினார். இந்த தகவல் விசாரணையில் தெரிய வந்தது.
அவர் 50 குண்டுகளுடன் தான் அந்த துப்பாக்கியை வாங்கியுள்ளார். தில்ஷனை சுட்ட பிறகு அவரிடம் 47 குண்டுகள் இருந்துள்ளன. அவற்றை ஒரு கவரில் போட்டு கூவத்தில் வீசினார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபி-சிஐடி போலீசார் ஏற்கனவே அந்த துப்பாக்கியை கூவத்தில் இருந்து எடுத்துவிட்டனர். இதையடுத்து துப்பாக்கி குண்டுகளை எடுப்பதற்காக போலீசார் நேற்று காலை 12 மீனவர்களுடன் நேப்பியர் பாலம் அருகே சென்றனர்.
அந்த மீனவர்கள் கூவத்தையே அலசி எடுத்தும் 8 குண்டுகளும், அவை வைக்கப்பட்டிருந்த கவர் மட்டும் தான் சிக்கின. மீதமுள்ள 39 குண்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று மாலை வரை தேடியதில் எதுவும் சிக்கவில்லை. எனவே, இன்று மீண்டும் தேடுதலைத் தொடர்வார்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில் தென்மண்டல ராணுவ பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சிங் நேற்று சென்னை வந்து சிறுவன் கொலை குறித்து ராணுவ அதிகாரிகளிடம் விசாரித்தார். அவர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள ராணுவ நிர்வாக நடைமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அதன்படி நேற்று தீவுத்திடலில் உள்ள ராணுவக் குடியிருப்புக்கு சென்று ராணுவ நிர்வாக நடைமுறை குறித்து ஆய்வு செய்தார்.
கூவத்தில் துப்பாக்கி குண்டுகளைத் தேடும் மீனவர்கள் கூறியதாவது,
கூவத்தில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருப்பதால் குண்டுகளைத் தேடுவது சிரமம். சேரில் சிக்கியிருந்தால் எடுத்துவிடலாம் ஆனால் தண்ணீர் அடித்துச் சென்றிருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. இந்த பணிக்கு எங்களுக்கு ரூ. 700 கூலி. கூவத்தில் சரக்கு அடிக்காமல் இறங்க முடியாது. அதனால் போலீசார் எங்களுக்கு சரக்கு வாங்கித் தந்தனர்.
இதெல்லாம் சரி. ஆனால் கூவத்தில் இறங்குவதால் எங்களுக்கு தோல் வியாதியோ அல்லது வேறு ஏதேனும் வியாதியோ வந்தால் யார் எங்கள் மருத்துவச் செலவுகளைப் பார்த்துக் கொள்வார்கள் என்று கேள்வி எழுப்பினர்.