அன்னா கோரிக்கை ஏற்பு- ஜன லோக்பால் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்
சமூக சேவகர் ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதா அல்லது மத்திய அரசு உருவாக்கியுள்ள லோக்பால் மசோதாவை ஏற்பதா என்பதில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.
அரசு உருவாக்கியுள்ள லோக்பால் மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளதாகவும், ஊழலை ஒழிக்க அது உதவாது என்றும், இதனால் தான் உருவாக்கிய ஜன் லோக்பால் மசோதாவைத் தான் சட்டமாக்க வேண்டும் என்றும் கோரி அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இதை முடிவுக்குக் கொண்டு வர அவருடன் மத்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச்சு நடத்தி வருகிறது. ஆனால், இதுவரை உடன்பாடு எட்டப்படாததால் அவரது உண்ணாவிரதம் தொடர்கிறது.
இந் நிலையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள நேற்று 3 முக்கிய நிபந்தனைகளை விதித்தார் அன்னா. மத்திய அமைச்சரும் ஹசாரேவின் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவருமான விலாஸ்ராவ் தேஷ்முக் மூலம் இந்த நிபந்தனைகளை பிரதமருக்கு சொல்லி அனுப்பினார்.
அதன்படி, 1. கீழ்மட்ட அரசு அதிகாரிகளை லோக்பால் விசாரணையின் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்-ஊழல் செய்யும் அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்-அவர்களது சொத்துக்களை அரசு கையகப்படுத்த வேண்டும், 2. அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும்-அதற்கு லோக்பாலுக்கு உரிய அதே அதிகாரத்தைத் தர வேண்டும் மற்றும் 3. அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் சாசனம் இருக்க வேண்டும்- அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் ஒவ்வொரு வேலையையும் செய்துதர காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்குள் வேலையை முடிக்காவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இந்த 3 கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, இன்றே நாடாளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஹசாரேவின் இந்தக் கோரிக்கைகள்-நிபந்தனைகள் குறித்து நேற்றிரவு பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்கள் பல மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில், இன்றே ஜன் லோக்பால் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
அதே போல மத்திய அரசு உருவாக்கிய லோக்பால் மசோதா, சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சிலின் உறுப்பினர் அருணா ராய் தயாரித்த லோக்பால் மசோதா ஆகியவை மீதும் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.
193-வது விதியின் கீழ் இந்த விவாதம் நடத்தப்படும் என்றும், இந்த விவாதம் பற்றிய குறிப்புகள் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அமளியால் நாளைக்குத் தள்ளிப் போன விவாதம்:
இந் நிலையில் இன்று லோக்பால் தொடர்பாக கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கடும் அமளி நிலவியதால் இரு அவைகளும் மதியம் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இதனால் இன்று லோக்பால் விவாதம் முழுமையாக நடக்க வாய்ப்பில்லை, நாளை விவாதம் நடக்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரதுறை அமைச்சர் பி.கே. பன்சால் தெரிவித்தார். இந்த விவாதம் காரணமாக, சனிக்கிழமையும் மக்களவை செயல்படும் என்றும் தெரிகிறது.
ஓட்டெடுப்புடன் கூடியதாக இந்த விவாதம் இருக்க வேண்டும் என பாஜக கோரியுள்ளது.
இந் நிலையில் நேற்றிரவு ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஹசாரே, என் உடல்நிலை பற்றி கவலைப்படுவதாக இப்போது (பிரதமர் கூறுகிறார். ஆனால், அவருக்கு அந்தக் கவலையில்லாமல்தான் 10 நாள்கள் கடந்தன.
வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மத்திய அரசு இரண்டு முறை துரோகமிழைத்து விட்டது. மூன்றாவது முறை, அவ்வாறு துரோகமிழைக்க விடமாட்டேன். "
நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமரும் இப்போது என்னைத் திரும்பிப் பார்க்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இந்தப் போராட்டத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவு தான். மக்கள்தான் மாபெரும் சக்தி. இந்த நாட்டில் ஏழைகள் வாழ்வதே நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது.
இந்த விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்) ஏன் அமைதியாக இருக்கின்றன? ஜன லோக்பால் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம், அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வாருங்கள் என்று அரசை அவர்கள் வலியுறுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.