இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர்
லண்டன்: இங்கிலாந்து துணை பிரதமர் நிக் கிளெக்கை கிளாஸ்கோ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீல நிற பெயிண்ட் நிரப்பிய முட்டையைக் கொண்டு தாக்கினார். இதையடுத்து அந்த மாணவர் கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்து துணை பிரதமர் நிக் கிளெக் கிளாஸ்கோவில் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார். அப்போது ஒருவர் நீல நிற பெயிண்ட் நிரப்பிய முட்டையை கிளெக்கின் முகத்தில் வீசினார். அது உடைந்து அவரது முகம், உடைகள் எல்லாம் பெயிண்டாகிவிட்டது.
இது குறித்து துணை பிரதமர் கூறியதாவது, எனக்கு 10 வயதுக்கு கீழ் 3 குழந்தைகள் உள்ளனர். இது போன்று முகம், உடலில் பெயிண்ட் கறை படிவது பழக்கமாகிவிட்டது என்றார் நகைச்சுவையாக.
நிக் கிளெக் லிபரல் டெமோகிராட் கட்சியின் தலைவர். கன்சர்வேட்டிவ்ஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க முக்கிய காரணமானவர். இது பிடிக்காமல் தான் அந்த மாணவர் முட்டையால் அடித்துள்ளார்.
கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிப்பவர் ஸ்டூவர்ட் ராட்ஜர் (22). அவர் யுகே அன்கட் என்னும் புரட்சி அமைப்பைச் சேர்ந்தவர். அவர் கடந்த 2 ஆண்டுகளாக லிபரல் டெமோகிராட் கட்சியில் தான் இருந்துள்ளார். கன்சர்வேட்டிவ்ஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது பிடிக்காமல் ரோட்ஜர் கடந்த மே மாதம் கட்சியில் இருந்து வெளியேறினார்.
இந்த கூட்டணிக்கு காரணமாக இருந்த நிக் மீது தனது வெறுப்பை காட்டவே முட்டையால் அடித்துள்ளார். இதற்காக அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், நிக் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வேலையில் இதெல்லாம் நடக்கத் தான் செய்யும். அதனால் அதை பெரிதுபடுத்த முடியாது என்று நிக் கூறியதாக அவர் தெரிவித்தார்.
துணை பிரதமர் மீது பெயிண்ட் கறை பட்டதும் அதைத் துடைக்க மக்கள் விரைந்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.