போலீஸார் அலட்சியமாக இருந்ததே வன்முறைக்குக் காரணம்- தலித் தலைவர்கள்
மதுரை: தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜை நிகழ்ச்சிக்கு பெருமளவில் தலித் மக்கள் வருவார்கள் என்று தெரிந்தும் கூட அதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக இருந்ததும், முறையான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யாத போலீஸாரின் செயலே வன்முறை வெடித்து 7 தலித்களின் உயிர் பறி போக காரணம் என்று தலித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சம்பத், நகர நிர்வாகி விக்கிரமன் ஆகியோர் கூறுகையில், ஜான் பாண்டியனை முதிர்ச்சியற்ற முறையில் கைது செய்து பிரச்னையை பெரிதாக்கி தேவையில்லாத வன்முறைக்கு போலீஸாரே காரணமாகி விட்டனர்.
போலீசாரின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. போலீஸார் முறையாக திட்டமிடாமல் இருந்ததே இந்த வன்முறைக்குக் காரணம். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் மற்றும் காயமுற்றவர்களுக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடக்கும் ஒன்று. எப்படி தேவர் குருபூஜைக்கு பெருமளவில் கூட்டம் கூடுமோ, அதேபோல இந்த நிகழ்ச்சிக்கும் ஆண்டு தோறும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், சேகரன் குருபூஜைக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் தலித் மக்கள் பெருமளவில் வருவார்கள் என்பதால் மாவட்டம் முழுவதும் எல்லைப் பகுதிகளில் போதிய பாதுகாப்பும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்யாமல் போலீஸார் அலட்சியமாக இருந்ததே வன்முறை வெடிக்கக் காரணம்.
மேலும் ஜான் பாண்டியன் விவகாரமும் மிகவும் தவறான முறையில் கையாளப்பட்டிருப்பதாகவும் தலித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.