மின்விசிறி சின்னத்திற்கு சுயேச்சைகளிடேயே ஏக கிராக்கி- 'குலுக்கி' ஒதுக்கினர்!
சென்னை: மின்விசிறி சின்னத்தைப் பெறுவதற்கு சுயேச்சை வேட்பாளர்களிடையே கடும் கிராக்கி நிலவியது. பலரும் அந்த சின்னத்தைக் கேட்டதால் குலுக்கல் முறையில் சீட்டு குலுக்கிப் போட்டு சின்னத்தை ஒதுக்கினர் தேர்தல் அதிகாரிகள்.
நேற்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதையடுத்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுயேச்சைகள் நிறையப் போட்டியிடுவார்கள் என்பதால் அவர்களுக்கு வசதியாக 30 சின்னங்கள் வரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது. ஆனால் சுயேச்சைகள் மத்தியில் ஒரு சில சின்னங்களுக்கு மட்டுமே கடும் கிராக்கி இருந்தது.
அதிலும் மின்விசிறி (டேபிள் ஃபேன்) சின்னத்துக்கு செம கிராக்கி. காரணம், தமிழக அரசு இலவச மின்விசிறி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியிருப்பதால் இந்த சின்னத்தை வாங்கினால் ஏதாச்சும் கொஞ்சம் ஓட்டு கிடைக்குமே என்பதால் சுயேச்சைகள் இந்த சின்னத்துக்கு அடித்துக் கொண்டனர்.
ஏகப்பட்ட பேர் ஒரே சின்னத்தைக் கேட்டதால் குழப்பமடைந்த அதிகாரிகள் பின்னர் குலுக்கல் முறையில் சீட்டு குலுக்கிப் போட்டு சின்னத்தை ஒதுக்கினர்.
அதேசமயம், தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள பல சின்னங்கள் மக்களுக்குப் புரியாத வகையில் இருப்பதாக சுயேச்சைகள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதைக் காட்டி எப்படி ஓட்டு வாங்கப் போகிறோம் என்றே புரியவில்லை என்றும் அவர்கள் அலுத்துக் கொண்டனர்.
வேட்பாளர் பட்டியல் அறிவித்து, சின்னங்களும் ஒதுக்கப்பட்டு விட்டதால், அன்பான வாக்காளர்களே, உங்கள் ஓட்டு எங்களுக்கே என்று கேட்டு வரும் வேட்பாளர்களின் பிரசாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.