மூணாறு விடுதியில் சென்னை பெண் கொலையில் திருப்பம்-தலைமறைவான கணவர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: கேரள மாநிலம் மூணாறில் உள்ள விடுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மகேஷ் குமார், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

கேரள மாநிலம், மூணாறு பார்வதி அம்மன் கோவில் அருகே தனியார் தங்குவிடுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 7ம் தேதியன்று இளம்ஜோடி ஒன்று வந்தனர். கணவன்-மனைவி எனக் கூறி அறை எடுத்துத் தங்கினர். தங்களின் பெயர் மகேஷ் மற்றும் ஷியாமளா என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் மகேஷ் வெளியில் போய் விட்டார். அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் விடுதி ஊழியர்கள் அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஷியாமளா உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் வந்து ஷியாமளாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ஷியாமளாவின் கைப்பையில் பெங்களூர் நிறுவன முகவரி ஒன்றும், சென்னை மேற்கு மாம்பல முகவரியும் கிடைத்தன. அதை வைத்து விசாரித்தபோது சென்னை வீட்டில் 2 மாதங்களுக்கு முன்பு வரை ஷியாமளா தங்கியிருந்தது தெரிய வந்தது. பின்னர் வீட்டை காலி செய்து விட்டதும் தெரிய வந்தது.

ஷியாமாளவுடன் தங்கியிருந்த மகேஷ் குமாரைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். இருவரும் காதலித்து மணம் புரிந்தவர்கள் என்று போலீஸார் சந்தேகப்பட்டனர். இந்த நிலையில், தற்போது மகேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே பட்டிமணியக்காரன் பாளையம் என்ற இடத்தில் மகேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஷியாமாளவும், மகேஷ் குமாரும் கணவன் மனைவி என்றும் தெரிய வந்துள்ளது. இதை ஷியாமளா மற்றும் மகேஷ் குமாரின் உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காதல் மணம் புரிந்தவர்கள்

பட்டிமணியக்காரன் பாளையம்தான் மகேஷ்குமாரின் சொந்த ஊராகும். 30 வயதாகும் இவரது தந்தை பெயர் சுப்பிரமணியன். இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். பிளஸ்டூ வரை படித்துள்ளார் மகேஷ்குமார். தனது வீட்டினருடன் கோபித்துக் கொண்டு 13 வருடங்களுக்கு முன்பே ஊரை விட்டு வெளியேறி விட்டார் மகேஷ். அதன் பின்னர் கோவை, திருப்பூர், பெங்களூர், சென்னை என பல ஊர்களில் வேலை பார்த்துள்ளார்.

சென்னையில் வேலை பார்த்தபோதுதான் ஷியாமளாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 3 வருடங்களுக்கு முன்பு இருவரும் கல்யாணம் செய்து கொண்டுள்ளனர். இந்தக் கல்யாணத்திற்கு இரு வீட்டாரும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இருப்பினும் இருவரும் அதைப் பொருட்படுத்தாமல் சந்தோஷமாகத்தான் குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூரில் வேலை பார்த்து வந்தார் ஷியாமளா. அப்போது அங்கு அவருடன் வேலை பார்த்த ஒருவருடன் ஷியாமளாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதை கண்டித்துள்ளார் மகேஷ் குமார். இந்த நிலையில்தான் இருவரும் மூணாறு போயுள்ளனர். அங்குதான் ஷியாமளாவை கொலை செய்துள்ளார் மகேஷ் குமார்.

ஷியாமளாவைக் கொலை செய்த பின்னர் நேராக தனது சொந்த ஊருக்கு வந்து விட்டார் மகேஷ். அங்கு தனது வீட்டில் தங்கிய அவருக்கு ஷியாமளாவின் நினைவு வாட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலீஸார் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சட்டைப் பையிலிரு்து இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளன. ஒன்றை தனது மனைவி குறித்தும், இன்னொன்றில் தனது தந்தை, தாயார் அமுதா, தங்கை பிரபா ஆகியோருக்கும் எழுதியுள்ளார் மகேஷ்.

தந்தைக்கு எழுதிய கடிதத்தில், உங்களுக்கு மகனாகப் பிறந்து எந்த கடமையையும் செய்யவில்லை. அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு பெண் குழந்தையாக பிறந்து உங்களின் முழுமையான அன்பை பெறுவேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

ஷியாமளாவுக்கு சென்னைதான் சொந்த ஊர். இவரது வீடு மேற்கு மாம்பலம் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ளது. இவரது தாயார் பெயர் ராணி. ஷியாமளாவுக்கு 23வயதாகிறது. பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார்.

தனது மகள் மரணம் குறித்து அறிந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் ராணி. சென்னைக்கு வந்த கேரள போலீஸாரிடம் கொல்லப்பட்டது தனது மகள்தான் என்று கூறி கதறியழுதார் அவர். பின்னர் ராணியும், அவரது உறவினர்களும் கேரள போலீஸாருடன் மூணாறு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் ஷியாமளாவின் உடல் ஒப்படைக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+