கொல்கத்தா மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் சாவு: விசாரணைக்கு மமதா உத்தரவு
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள பி.சி.ராய் குழந்தைகள் மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் இறந்துள்ளன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ளது பி.சி.ராய் குழந்தைகள் நல மருத்துவமனை. அங்கு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 12 குழந்தைகள் இறந்துள்ளன. குழந்தைகள் மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டதால் தான் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துமவமனை உயர் அதிகாரி திலிப் ராய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
நாங்கள் எங்கள் சேவை மற்றும் சிகிச்சையை மேம்படுத்தத் தான் செய்கிறோம். இருப்பினும் சில குழந்தைகள் இறந்துவிடுகின்றன. குழந்தைகள் மிகவும் மோசமான நிலையில் கொண்டு வரப்படுவதால் தான் அவற்றை காப்பாற்ற முடிவதில்லை என்றார்.
ஆனால் குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு வந்தும் உடனே அனுமதிக்காமல் அதிகாரிகள் கால தாமதம் செய்ததால் தான் குழந்தைகள் இறந்தன என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் அந்த மருத்துவமனையில் இறந்த 6 மாத குழந்தை அபிரின் உறவினர்கள் மருத்துவமனை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் தான் இதே மருத்துவமனையில் 18 குழந்தைகள் இறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.