மோசடி, நில அபகரிப்பு வழக்குகளில் கைதான லாட்டரி மார்ட்டினின் மகள் தற்கொலை முயற்சி
கோவை: நில அபகரிப்பு, பண மோசடி உள்ளிட்ட புகார்களின் பேரில் கைதாகி, தற்போது குண்டர் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகள் டெய்சி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் படு சுதந்திரமாக வலம் வந்தவர் மார்ட்டின். இவர் மீது சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவில் வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. ஆனாலும் திமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்து கொண்டு அதிலிருந்து தப்பி வந்தார் மார்ட்டின். மேலும், சினிமா படத் தயாரிப்பிலும் ஈடுபட்டார்.
இந்த நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் குண்டர் தடைச் சட்டமும் பாய்ந்தது. இதனால் அவர் ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வெளி வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதை அறிந்து அவரது மனைவி லீமா ரோஸ், மகன்கள் சார்லஸ், டெய்சன், மகள் டெய்சி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் லீமா, மகள், மகள்கள் பெயரிலும் மார்ட்டின் பல சொத்துக்களை வாங்கிக் குவித்திருந்ததால் அவர்களும் கைது செய்யப்படக் கூடிய நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு 19 வயதான மகள் டெய்சி மன உளைச்சலுக்குள்ளாகி, அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார். இன்று அதிகாலை அவர் மயங்கிய நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.