திருச்சியில் சரக்கு ரயில் தடம்புரண்டது: 2 பெட்டிகள் மண்ணில் புதைந்தன
திருச்சி: ஈரோடில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற சரக்கு ரயில் திருச்சி குட்ஷெட் யார்டில் தடம் புரண்டது. இதில் 2 பெட்டிகள் மண்ணில் புதைந்தன.
ஈரோட்டில் இருந்து சரக்கு ரயில் ஒன்று, கரூர் மாவட்டம் வீரராக்கியம் செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து 41 பெட்டிகளில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு செங்கல்பட்டு நோக்கிச் சென்றது. நேற்று காலை 8.15 மணியளவில் திருச்சி பொன்மலை குட்ஷெட் யார்டுக்கு வந்தது. அங்கு ரயில்கள் பழுதுபார்க்கப்படும்.
அப்போது சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதில் 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு ரயில் மீது மோதியது. இன்னும் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த ரயில் மாற்று வழிப்பாதையாக வந்ததால் சரக்கு ரயில் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் யார்டில் வேறு சரக்கு ரயில்களை பரிசோதிக்கவோ, பழுது பார்க்கவோ முடியாமல் உள்ளது.
மண்ணில் புதைந்த பெட்டிகளில் இருந்த சிமெண்ட் மூட்டைகள் இறக்கப்பட்டு அந்த 2 பெட்டிகள் மீட்கப்பட்டன. தண்டவாளத்தில் இருந்து விலகிய இன்னும் 2 பெட்டிகளை மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.