மசோதாவை மட்டும் நிறைவேற்றாவிட்டால் 5 மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம்: அன்னா அதிரடி
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிவதற்குள் அரசு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக நாங்கள் பிரசாரம் செய்வோம் என்று அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அன்னா ஹசாரே கடந்த மாதம் 16ம் தேதி முதல் மவுன விரதம் இருந்து வந்தார். 19 நாட்களாக மவுன விரதம் இருந்து வந்த அவர் இன்று காலை 7 மணியளவில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் தனது மவுன விரதத்தை முடித்துக் கொண்டார். மவுன விரதத்தை முடித்தவுடன் அவர் சொன்ன முதல் வார்த்தை பாரத் மாதா கி ஜெய்.
லோக்பால் மசோதா குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அன்னா நேற்றிரவு டெல்லி வந்தார். அப்போது அவர் கூறியதாவது,
நான் யாருக்காகவும், எந்த கட்சிக்காகவும் மவுன விரதம் இருக்கவில்லை. எனக்காத் தான் இருந்தேன். ராம் லீலா மைதானத்தில் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததில் எனது உடல் நிலை பாதிக்கப்பட்டது. தற்போது மவுன விரதம் இருந்ததால் எனது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்னுடைய எடை மற்றும் ரத்தஅழுத்தம் தற்போது நார்மலாக உள்ளது. லோக்பால் மசோதாவுக்காகவும், ஊழலை எதிர்த்தும் நாம் போராட வேண்டும்.
போராடத் தேவையான புது தெம்பு கிடைத்திருக்கிறது. நான் போராடத் தயார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிவதற்குள் அரசு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக நாங்கள் பிரசாரம் செய்வோம். மத்திய அரசு உத்தரகண்ட் லோக்ஆயுக்தாவை முன் உதாரணமாகக் கொண்டு செயல்படட்டும்.
ஊழல் என்று வந்துவிட்டால் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் வித்தியாசம் இல்லை என்றார்.
ஹரியானா மாநிலம் ஹிசாரில் நடந்த இடைத்தேர்தலின்போது அன்னா குழு காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்தது. இதையடுத்து அங்கு காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது என்பது குறிப்பிடத்தக்கது.