ஆறு புதிய அமைச்சர்களும் ஜெ முன்னிலையில் நாளை பதவியேற்பு
சென்னை: தமிழக அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்ட 6 அமைச்சர்களும் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்க உள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் மாலை 3 மணியளவில் நடைபெறும் விழாவில் தமிழக ஆளுநர் ரோசைய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதசா பங்கேற்கிறார்.
6 பேர் உள்ளே 6 பேர் வெளியே
தமிழக அமைச்சரவையில் நேற்று 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. ஊரகத் தொழில்கள்துறை அமைச்சர் சி.சண்முகவேலு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, செய்தி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைகள் துறை அமைச்சர் ஜி.செந்தமிழன், உணவுத் துறை அமைச்சர் புத்தி சந்திரன் ஆகியோர்
அமைச்சரவையில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். அந்த 6 பேருக்குப் பதிலாக எஸ்.தாமோதரன், ஆர்.காமராஜ், எஸ்.சுந்தரராஜ், எம்.பரஞ்சோதி, வி.மூர்த்தி, கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரை புதிய அமைச்சர்களாக வெள்ளிக்கிழமையன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்
இலாகா ஒதுக்கீடு
இதில் தாமோதரனுக்கு வேளாண்மைத்துறையும், எம்.பரஞ்சோதிக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவுத்துறை காமராஜூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வி.மூர்த்தி கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.சுந்தரராஜ்க்கு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையும், கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு செய்தித் துறையுடன் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நாளை மாலை 3 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடக்கிறது. கவர்னர் ரோசையா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது