கர்நாடகம்: தாமரை சின்னத்தில் போட்டியிட மறுத்த ஸ்ரீராமலு-பாஜகவை விட்டு நீக்கம்!
பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் வலதுகரமான இவர், சுரங்க ஊழல் விவகாரத்தில் பதவி விலகினார். இந் நிலையில் நவம்பர் 30ம் தேதி பெல்லாரி ஊரகத் தொகுதிக்கு நடக்கும் இடைத் தேர்தலில் போட்டியிட இவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து அவருக்கு தாமரை சின்னத்தை ஒதுக்கும் ஆவணத்தை கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா அனுப்பினார். ஆனால், அதை வாங்க மறுத்துவிட்ட ஸ்ரீராமுலு, சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துவிட்டார்.
சுரங்க ஊழல் விவகாரத்தில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டியை சந்தித்துவிட்டு வந்த பின் இந்த அறிவிப்பை ஸ்ரீராமுலு வெளியிட்டார்.
இந் நிலையில் கட்சிக்கு தான் துரோகம் ஏதும் செய்யவில்லை என்றும், கட்சி தான் தன்னை ஒதுக்கி வைத்ததாகவும் ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.
புதுக் கட்சி இல்லை-எதியூரப்பா:
இந் நிலையில் ஊழல், நில மோசடி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் எதியூரப்பா புதிய கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளன.
கர்நாடக பாஜகவில் எதியூரப்பா கோஷ்டி, ரெட்டி சகோதரர்கள் கோஷ்டி, ஈஸ்வரப்பா கோஷ்டி, ஜெகதீஷ் ஷெட்டார் கோஷ்டி என பல கோஷ்டிகள் உள்ளன. இதில் எதியூரப்பா கோஷ்டி தான் ஜாதிரீதியில் பலமானது.
ஆனாலும் சமீபத்தில் லோக் ஆயுக்தா எதியூரப்பா மீது நடவடிக்கை எடுத்தபோது எதியூரப்பாவை பாஜக தலைமை கை கழுவிட்டது. இதனால், தலைமை மீது கடும் கோபத்தில் உள்ள அவர், ஆட்சியைக் கூட கவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய எதியூரப்பாவிடம் இது குறித்துக் கேட்டதற்கு, அதை வன்மையாக மறுத்தார். நான் எதற்காக புதிய கட்சி துவக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவர், கர்நாடகாவில் பாஜகவுக்கு அடிப்படையே நான் தான். கட்சியை கட்டி எழுப்பியவன் நான். வெறும் இரண்டு எம்.எல்.ஏக்களை கொண்டிருந்த பாஜக தற்போது மாநிலத்தின் நம்பர் ஒன் கட்சியாக திகழ்கிறது என்றார்.