ஹசாரேவின் 'சர்டிபிகேட்' தேவையில்லை: ஆதரித்த நிதிஷ்குமாரே கடும் தாக்கு!
பாட்னா: தனது அரசு குறித்து குறை கூறிய அன்னா ஹசாரேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பிகார் முதல்வர் நிதிஷ் குமார்.
ஊழலை ஒழிக்க பிகார் அரசு கொண்டு வரப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்ட மசோதா சரியில்லை என்று அன்னா ஹசாரே கூறியிருந்தார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த நிதிஷ் குமார், நான் மக்களுடன் தொடர்பில் இருக்கும் ஒரு முதலமைச்சர். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களுக்கு என்ன வேண்டும் எனக்கு நன்றாகவே தெரியும். அது சரியில்லை இது சரியில்லை என்று குறை கூறிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை, அவர்களது சான்றிதழும் எனக்குத் தேவையில்லை.
எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பதை முதலில் அவர்கள் நிறுத்த வேண்டும். ஒரு அளவோடு நிறுத்துக் கொள்வது தான் அவர்களுக்கு நல்லது. நான் பதில் சொல்ல வேண்டியது மக்களுக்குத் தான், இவர்களுக்கு இல்லை என்றார்.
இத்தனைக்கும் அன்னா ஹசாரேவுக்கு கடந்த வாரம் வரை ஆதரவு தந்து வந்தவர் நிதிஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹசாரே குழுவினரின் சில செயல்களால் அவர்களை ஆதரித்து வந்த பலரும் கூட, இப்போது பின்வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.