மதுரையில் ஏலக்காய் ஏஜெண்ட் கையை வெட்டி ரூ.25 லட்சம் கொள்ளை: 5 பேருக்கு வலை
மதுரை: மதுரையில் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்த ஏலக்காய் ஏஜெண்ட் சிவராமன் என்பவரின் கையை வெட்டி அவரிடம் இருந்த ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையின் முக்கிய வர்த்தக பகுதியான கீழமாசி வீதியில் எப்பொழுதும் ஜனநடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த சாலையில் நேற்று இரவு 8 மணிக்கு கையில் பையுடன் சிவராமன் நடந்து சென்றார். காமராஜர் சாலை சிக்னலை கடந்து செல்ல நின்றபோது, அங்கு ஓடி வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. அப்போது அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த வாளால் ஏஜெண்டு கையை வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் தன் கையில் வைத்திருந்த பணப் பையை கீழே போட்டார்.
உடனே அந்த 5 பேரும் அந்த பையை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அதனை கண்ட காயமடைந்த நபர் தனது பணப் பையை எடுத்து கொண்டு ஓடுவதாக கூறி கத்தினார். பின்னர் ரத்த போக்கால் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார்.
சிறிது தூரம் ஓடிய அந்த கும்பல், அப்பகுதியில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளில் தப்பியோடிவிட்டனர். காயமடைந்தவரின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் ஓடிவந்தனர். நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து காயமடைந்தவர் கூறியதாவது,
நான் மதுரையை சேர்ந்த சிவராமன்(56). ஏலக்காய் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறேன். எனது முதலாளி கம்பம் பகுதில் உள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் மதுரைக்கு வந்து, குறிப்பிட்ட நபரிடம் ரூ.24,50,000 பணத்தை ஒரு பண்டலாகவும், ரூ.5 லட்சம் இன்னொரு பண்டலாகவும் பெற்றேன். அந்த பணத்துடன் காமராஜர் சாலையில் நின்ற போது, 5 பேர் கொண்ட கும்பல் என்னை தாக்கிவிட்டு பணத்தை எடுத்து சென்றுவிட்டது என்றார்.
சிவராமனிடம் பணத்தை பறித்துச் சென்ற போது ரூ.5 லட்சம் பண்டல் கீழே தவறி விழுந்துவிட்டது. அந்த பணத்தை மீட்ட போலீசார் தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனர்.