அணுமின் நிலையத்தைப் பார்வையிட மாணவர்களை அழைத்துச்சென்றதற்கு எதிர்ப்பு – பெற்றோர் முற்றுகை
இடிந்தகரை: கூடங்குளம் அணுமின்நிலையத்தை பார்வையிடுவதற்கு செட்டிகுளம் பள்ளி மாணவர்களை அழைத்துச்சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் 33 நாட்களாக போராட்டக்குழுவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அணுமின்நிலையத்தில் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க செட்டிக்குளம் அரசு பள்ளியில் இருந்து 9,10-ம் வகுப்பு மாணவர்களை அணுமின்நிலைய அதிகாரிகள் அழைத்துச்சென்றனர். இதனையறிந்த பெற்றோர்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை
எந்த வித பாதுகாப்பும் இல்லாத அணுமின்நிலையத்திற்குள் தங்களிடம் அனுமதி பெறமால் மாணவர்களை அழைத்துச்சென்றது ஏற்றுக்கொள்ளமுடியாது என பெற்றோர்கள் தெரிவித்தனர். உடனடியாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
அணு மின் நிலைய அதிகாரிகள் தங்களில் பிள்ளைகளுக்கு மூளைச்சலவை செய்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனிடையே இடிந்த கரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள போராட்டக்குழுவினர், அணு உலையை மூடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.