காவலர் தேர்வில் ஆதரவற்ற பெண்களுக்கு 10 % இடஒதுக்கீடு – ஜெ அறிவிப்பு
சென்னை: காவலர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நியமனம் செய்யப்படும் காவலர் பணியிடங்களில் ஆதரவற்ற பெண்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை வார்டன், மற்றும் தீயணைப்போர் ஆகிய பணியிடங்களில் உள்ள பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் ஆதரவற்ற பெண்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதலமைச்சர் ஜெயலலிதா தமது ஆட்சி காலங்களில் எல்லாம் மகளிர் நலன் காத்து அவர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆதரவற்ற மகளிர் வாழ்வில் ஒளி வீசும் வகையில் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
இதன் அடிப்படையில் காவலர் பணியிடங்களில் மகளிருக்கென 30 சதவிகிதம் ஒதுக்கீடு செய்து 1996 ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளார்கள். மகளிருக்கான இந்த இடஒதுக்கீடு காவலர் தேர்வு ஆணையத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நியமனம் செய்யப்படும் காவலர் பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆதரவற்ற மகளிருக்கு 10 சதவிகிதம்
ரூ 2400/-க்கு மிகாத தர ஊதியம் (Grade Pay) உள்ள அரசு பணியிடங்களில் மகளிருக்காக உள்ள இட ஒதுக்கீட்டில் 10 சதவிகிதம் ஆதரவற்ற பெண்களுக்கென வழங்கப்படுகிறது. ஆதரவற்ற பெண்களுக்கான இந்த ஒதுக்கீடு காவலர் பணியிடங்களுக்கான தேர்வுகளில் வழங்கப்படுவதில்லை.
இதனை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா காவலர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நியமனம் செய்யப்படும் காவலர் பணியிடங்களிலும், மகளிருக்காக உள்ள இட ஒதுக்கீட்டில், ஆதரவற்ற பெண்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, காவலர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை வார்டன், மற்றும் தீயணைப்போர் ஆகிய பணியிடங்களில், இனி ஆதரவற்ற பெண்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும்.